பங்குனித் திருவிழாவையொட்டி, மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ணதீர்த்த தெப்பல் உற்சவம் இன்று நடைபெறுகிறது.
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா, கடந்த மார்ச் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
விடையாற்றி விழாவின் நிறைவு நாளான இன்று (ஏப்ரல் 23) கோயிலின் வலதுபுறம் உள்ள கிருஷ்ணதீர்த்த தெப்பக் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
இதையொட்டி, குளத்தில் அமைக்கப்பட்டுள்ள தெப்பத்தில் இரவு 8.30 மணிக்கு சத்யபாமா, ருக்மணி சமேதராக உற்சவர் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள், உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.