காஞ்சிபுரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரததை திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசித்துச் செல்கின்றனர்.
கடந்த 31 நாள்களாக சயனக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதர் பெருவிழாவின் 33-வது நாளான இன்று கரும்பச்சை நிறப் பட்டாடை உடுத்தி, மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் ஆங்காங்கே தங்கியிருந்து அத்திவரதரை விடியற்காலையில் தரிசித்துச் சென்றனர்.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இந்து அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வயிறார அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், நாளை ஆடிப்பூரம் என்பதால் அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு, வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற உள்ளது.
திருக்கல்யாணம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.