காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் கிழக்கு வாயில் மாலை 5.00 மணிக்கு மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆண்டாளுக்குத் திருக்கல்யாண உற்சவம் இன்று நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக கிழக்கு கோபுர வாசல் பிற்பகல் 2.00 மணிக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை காண வரிசையில் குவிந்துள்ளதால், அத்திவரதரை தரிசிக்கும் கிழக்கு கோபுர வாயில் மாலை 5.00 மணிக்கு மூடப்படுகிறது. அதன்பிறகு ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் முடிவடைந்தபின் மீண்டும் 8 மணிக்குப் பிறகு இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்து செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத்துறை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.