தினமணி செய்தி எதிரொலியாக, வரதராஜப் பெருமாள் கோயில் இணையதளப் பக்கத்தில் அத்திவரதர் பெருவிழா குறித்த தகவல்களைப் பதிவேற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இவ்விழா குறித்து உள்ளூர், அண்டை மாவட்ட மக்கள் ஊடகங்கள் மூலம் தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றனர். எனினும், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் வாழ்வோர் வரதர் கோயிலின் இணையதளப் பக்கத்தில் இவ்விழா குறித்து தகவல் தேடி வந்தனர்.
விழாவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இதுவரை வரதர் கோயில் இணையதள பக்கத்தில் விழா தொடர்பான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனால், வெளிநாடு வாழ்வோர் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்துள்ளதாக கடந்த ஜூன் 24ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் வரதர் கோயிலின் http://www.kanchivaradarajartemple.com எனும் இணையதளப் பக்கத்தில் அத்திவரதர் பெருவிழா குறித்து பதிவேற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.