பழனி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விஐபி தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் முக்கிய விழா நாள்களில் முக்கியப் பிரமுகர்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏ மற்றும் எம்பி.,க்களிடம் கடிதம் பெற்று வருபவர்களுக்கு ரோப்கார், வின்ச்சுகளில் செல்ல முன்னுரிமை அளிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிப்பது வழக்கம்.
இதுபோன்ற நேரங்களில் கோயில் ஊழியர்களுக்கும், வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்க இயலாது என கோயில் நிர்வாகம் பதாகைகள் வைத்துள்ளது.
பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி சந்நிதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு மலைக்கோயிலில் கோயில் நிர்வாகம் சார்பில் சின்னக்குமாரசாமி தங்க ரதத்தில் உலா எழுந்தருளினார்.
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி இன்று திருஆவினன்குடி கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான நான்கு நாள்களுக்கு மலைக்கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மலைக்கோயிலில் வழக்கம் போல் தங்கத்தேர் உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.