இந்த விகாரி வருடம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்: பணம் பலவழிகளில் வருமாம்.. என்ஜாய்!

விகாரி ஆண்டில் கடக ராசிக்கு சற்று ஏற்றமான ஆண்டாகவே அமைந்துள்ளது. உங்களின் சமயோசித புத்தியால்..
இந்த விகாரி வருடம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்: பணம் பலவழிகளில் வருமாம்.. என்ஜாய்!

விகாரி ஆண்டில் கடக ராசிக்கு சற்று ஏற்றமான ஆண்டாகவே அமைந்துள்ளது. உங்களின் சமயோசித புத்தியால் போட்டிகளைச் சாதுரியமாகச் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் நீங்கள்!

புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி அமைதி பூத்துக்குலுங்கும். முகத்தில் புதுப்பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தைரியமாக முயற்சிகளைச் செயல்படுத்தத் துவங்குவீர்கள். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் நீங்கி தெளிவு உண்டாகும்.

பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளின் மூலமும் வருமானம் வரத்தொடங்கும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் இனி நிச்சயமாக நடக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலர் பழைய வாகனத்தை விற்று புதிய வாகனத்தை வாங்குவார்கள். நெடுநாளாக விற்காமலிருந்த சொத்துகளை விற்று அதன் மூலம் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

உடன்பிறந்தோரிடம் தாமரை இலைத் தண்ணீர் போல் பழக வேண்டுமே தவிர நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பது நல்லதாகும். வங்கியில் அடமானம் வைத்திருக்கும் நகைகளை மீட்டு விடுவீர்கள். கடந்த காலத்தில் உழைப்புக்குக் கிடைக்காத மதிப்பும் மரியாதையும் இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.

ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செயற்கரிய காரியங்கள் பலவற்றைச் செய்து அதன்மூலம் சமுதாயத்தில் பெரும் புகழ் அடைவீர்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு உயர்ந்து புதிய சலுகைகளையும் பெறுவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். குடும்ப நிர்வாகமும் மகிழ்ச்சிக்குரியதாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களும், குழந்தைப்பேறும் உண்டாகும்.

உங்களைக் குற்றம் குறை கூறிக்கொண்டிருந்தவர்கள் புகழத் தொடங்குவார்கள். எதிர்காலத்தில் சற்று தலைநிமிர்ந்து நடப்பதற்கான வசதி வாய்ப்புகள் எதிர்பாராத வகையில் உண்டாகும். செய்தொழிலிலும் இடைத்தரகர்கள் விலகி நேரடியாகப் பொருள்களை விற்று லாபம் காண்பீர்கள். குழந்தைகள் வகையிலிருந்த சிரமங்கள் மறைந்து நிலைமை சீராகும். அடிக்கடி பயணங்கள் செய்து செய்தொழிலை மேன்மையடையச் செய்வீர்கள். யோகா, பிராணாயாமம் செய்து உடல்நலம் மனவளம் இரண்டையும் மேம்படுத்திக்கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 
 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். கடின உழைப்பையே தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப்பழகவும். சிலர் அனாவசியமாக உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். வருமானத்திற்குக் குறைவில்லை. அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. மதிப்பு, கௌரவம் கூடும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் விஷயமாக அக்கறை காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் லாபங்களைக் காண்பீர்கள்.

சமயோசித புத்தியால் போட்டிகளைச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் காரியங்களில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி காண்பீர்கள். பெயரும் புகழும் அதிகரிக்கும். முக்கிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உள்ளத்தில் புதிய தெளிவுகளைப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்துத் தீர்க்க முயற்சிப்பீர்கள். வருமானம் பலவழிகளிலும் வந்து கொண்டே இருக்கும்.

கலைத்துறையினருக்கு வருமானம் ஓரளவு சீராக இருக்கும். முக்கிய முடிவுகளை உயர்ந்தோரைச் சந்தித்து எடுக்கவும். திறமைகளை வளர்த்துக்கொள்ள புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பார்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள்.

நாடிவரும் நண்பர்களுக்குத் தயங்காமல் உதவி செய்வீர்கள். உடன்பிறந்தோர் அன்பாக இருப்பார்கள். எவரிடமும் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் எடுக்கும் முயற்சிகளுக்குத் தகுந்தவாறு மதிப்பெண்கள் பெறுவார்கள். பாடங்களை உடனுக்குடன் படித்து மனதில் நிறுத்துவது நல்லது. வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். விளையாட்டில் ஆர்வத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரம்

கடக ராசிக்காரர்கள் அவரவர் குலதெய்வ வழிபாடு செய்வது மிகுந்த பலனளிக்கும். சப்த கன்னிகைகளின் வழிபாடும் சிறந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com