திருமலையில் வரும் 11 மற்றும் 12ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி உற்சம் வெகுவிமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு ரதசப்தமி பிப்.12-ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அன்று ஒரு நாள் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.
மாட வீதியில் மலையப்ப சுவாமி வலம் வரும் அழகான காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவது வழக்கம். இந்தாண்டு அவ்வாறு எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, பிப்ரவரி 11 மற்றும் பிப்ரவரி 12-ம் தேதிகளில் பரிந்துரைக் கடிதங்கள் மூலம் வழங்கும் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மேலும் அந்த நாள்களில் விஐபி-க்கள் நேரடியாக வந்தால் மட்டும் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 12-ம் தேதி தர்ம தரிசனம், நடைபாதை மார்க்கத்தில் நடந்து செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.