
திருப்பதி ஏழுமலையான கோவில் லட்டு பிரசாதம் தயாரிப்புக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவின் நெய் பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, ஆவின் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு ஆவின் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக 7 லட்சத்து 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அதில், சேலம்-ஈரோடு ஒன்றியங்கள் மூலமாக ஆவின் நிறுவனம் கலந்து கொண்டது. நெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் ஆவின் தேர்வு செய்யப்பட்டது. ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட உள்ளது. 2003-04-ஆம் ஆண்டுக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இப்போது ஆவின் நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க ஒப்புதல் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.