ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நாளை முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நாளை ராமேஸ்வரத்திற்கு வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பண பூஜை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை பகல் 1.00 மணிக்கு அடைக்கப்படாமல் முழுவதுமாக திறக்கப்பட்டிருக்கும். ஆடி திருவிழாவையொட்டி நாளை இரவு தேரோட்டம் நிறைவுபெற்ற பின்னரே கோயில் நடை அடைக்கப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட வசதியாக கிழக்குவாசல் பகுதியிலிருந்து வடக்கு கோபுர வாசல் வரை தடுப்பு கம்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.