வேதை (தொல்லை) போக்கும் வேத பரிகார முறைகள்! 

எப்படி மனிதர்களுள் ஒருவருக்கு செய்யும் உபகாரத்தை சிலர் ஆதரிப்பதும் சிலர் அதனைத் தடுப்பதும் உள்ளனரோ..
வேதை (தொல்லை) போக்கும் வேத பரிகார முறைகள்! 

1. எப்படி மனிதர்களுள் ஒருவருக்கு செய்யும் உபகாரத்தை சிலர் ஆதரிப்பதும் சிலர் அதனைத் தடுப்பதும் உள்ளனரோ அதே போல் தான், கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில்  தனது தசா புத்திகளில் நடந்துகொள்ளும். சில பொது ஜாதகருக்கு (வேதை) தொல்லைகளைத் தரவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்ட கிரகங்கள், அவ்வாறு செயல்படாமல்  போவதும் உண்டு. இதனை விரிவாகக் காண்போம். 

2. முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, ஒவ்வொரு ஜனன ஜாதகத்திலும் சுபர் யார் மற்றும் அசுபர் (பாபர்) யார் என்பதுமே ஆகும். சுபர் / அசுபர் ஒவ்வொன்றிலும்   இரு வகைப்படுவர். ஒன்று இயற்கை சுபர் அல்லது இயற்கை அசுபர் (பாபர்). இது அனைவருக்குமே பொதுவாக அமையும் கிரகங்களின் தன்மைகள். இயற்கை சுபர்கள் யார்  என்றால், புதன், குரு, சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன். அதேபோல் இயற்கை அசுபர்கள் (பாபர்கள்) யார் என்றால், சூரியன், செவ்வாய், சனி மற்றும் நிழல் கிரகங்களான  ராகு, கேதுக்கள் ஆவர்.  

3. மற்றொன்று லக்கின சுபர் / லக்கின அசுபர் (பாபர்) ஆவர். இதனை ஒவ்வொரு ஜாதகமாக பார்த்து தான் அறிய முடியும். சரி இதனை எவ்வாறு அறிவது எனப் பார்த்தால் ஒவ்வொரு லக்னத்திற்கும் யோகாதிபதி, பாக்கியாதிபதி இவர்கள் லக்கின சுபர் என்றும் பாதகாதிபதி, மாரகாதிபதி, அஷ்டமாதிபதி, ரோகாதிபதி, அவயோகி, விஷ சூன்ய  ராசிகளின் அதிபதி மற்றும் வேதகனாக வரும் கிரகம் போன்றவைகள் லக்கின பாபர்கள் என்றும் அறிந்துகொள்ள வேண்டியது ஆகும். இவர்கள் பொதுவாகவே, ஒரு ஜாதகருக்கு வேதை அளிக்க வல்லவர்கள்.

4. ஒரு ஜனன ஜாதகத்தில், கேந்திர (1, 4, 7, 10) ஸ்தனங்களான இவற்றின் அதிபதியும், திரிகோண ஸ்தனங்களான (1, 5, 9) இவற்றின் அதிபதியும் ஒருவரே ஆகும்பட்சத்தில் அவர் ஜாதகருக்கு யோகத்தை அளிக்கும் யோகாதிபதி ஆவார். அனைத்து லக்கினகாரர்களுக்கும் லக்கினத்திற்கு 9-ஆம் அதிபதியாக வருபவர் பாக்கியாதிபதி  ஆவார். இவர்கள் அனைவரும் பொதுவாக நன்மையே ஜாதகருக்கு அளிப்பார்கள், எனவே இவர்கள் லக்கின சுபர்கள் ஆவர். அப்படிப்பட்ட இவர்கள் ஜாதகருக்கு  உண்மையிலேயே சுபத்துவத்தை அளிப்பார்களா என்பதனை ஆராய்ந்து தான் சொல்ல வேண்டி வரும்.  

5. சர லக்கின காரர்களுக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) லக்கினத்துக்கு 11-ஆம் அதிபதியும், ஸ்திர லக்கினகாரர்களுக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) லக்கினத்துக்கு 9ஆம் அதிபதியும், உபய லக்கின காரர்களுக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) லக்கினத்துக்கு 7-ஆம் அதிபதியும் பாதகாதிபதி ஆவர். இது போன்று  அனைத்து லக்கின காரர்களுக்கும், மாரகாதிபதி, அஷ்ட்டமாதிபதி, ரோகாதிபதி, அவ யோகி, விஷ சூன்ய ராசிகளின் அதிபதி மற்றும் வேதகனாக வரும் கிரகம் போன்றவைகளைக் கண்டு பின்னர் அதற்குறிய பரிகாரங்களை செய்தல் அவசியம். 

6. பொதுவாகவே, பரிகாரம் செய்பவரின் ஜாதகத்தின் பாக்கியதிபதியின் தசை / புத்தி / அந்தரங்களில் செய்வதால் பரிகாரம் செயல்பட (ACTIVATE) துவங்கும். ஒரு  ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் அன்றும் பரிகாரம் செய்யலாம் அப்போது எந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்வதால் முழுபலனை செய்தவர் கிடைக்கப்பெறுவாரோ அதற்கு  ஏற்றார்போல் அந்த கிரகத்தின் ஹோரையில் பரிகாரம் செய்வது நல்லது.
   
7. இதுபோன்று அனைத்து லக்கினகாரர்களுக்கும், மாரகாதிபதி காணுதல் அவசியம். அதாவது சர லக்கினகாரர்களுக்கு, லக்கினத்தில் இருந்து வரும் 2 மற்றும் 7-ஆம்  அதிபதியும், ஸ்திர லக்கினத்திற்கு 3 மற்றும் 8-ஆம் அதிபதியும், உபய லக்கின காரர்களுக்கு 7 மற்றும் 11-ம் அதிபதியும் மாரக அதிபதிகள் ஆவார்கள். அடுத்து  அஷ்டமாதிபதி, இவர் அனைத்து லக்கின காரர்களுக்கும் 8-ஆம் அதிபதியாக வருபவரே ஆவார். ரோகாதிபதி என்பவர் அனைத்து லக்கின காரர்களுக்கும் 6-ஆம் அதிபதியே  ஆவார். 

8. அவ யோகி, விஷ சூன்ய ராசிகளின் அதிபதி மற்றும் வேதகனாக வரும் கிரகம் போன்றவற்றைக் கண்டு பின்னர் அதற்குரிய பரிகாரங்களைச் செய்தல் அவசியம்.          (இவற்றைப் பற்றித் தெளிவு பெற வேண்டின் தொடர்புகொள்க ).

9. இவை அனைத்தும் கவனித்துச் செய்யும் போது முழு பலனை ஜாதகர் பெறுவதோடு அவர் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும். இதில் அவசரம் காணலாகாது.  உண்மைக்கு அவசரம், உண்மையாக இருக்க முடியாது. மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு கர்ம வினையே காரணம் என நம் மதம் கூறுகிறது. இதனால்   பரிகாரத்தினால் மட்டுமே எதிர்மறையான பலன்களைக் குறைக்க முடியும் என்று மக்கள் ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து அதில் நிம்மதியைத் தேடுகிறார்கள். ஒரு  சிலர் போலி சாமியார்களிடம் சென்று ஏமாறுகின்றனர். ஒரு சிலர் போலி ஜோதிடர்களிடம் சென்று ஏமாறுகின்றனர். 

பரிகாரம் என்றால் பொதுவாக ஞாபகத்திற்கு வருவது கோயில்களுக்குச் செல்வது, அர்ச்சனை செய்வது மற்றும் அபிஷேக ஆராதனைகள் தான்.

10. மேலே கூறிய இவ்வளவையும் கண்டு தான் பரிகாரம் செய்ய ஒரு ஜோதிடர் சொல்லுவார். இதற்கு "அவசரம்" - நிச்சயம் பரிகாரமாகாது என முதலில் அனைவரும் புரிந்து  கொள்ளுதல் அவசியம். 

பரிகாரத்தினால் எதிர்மறையான பலன்களைக் குறைக்கமுடியுமே தவிர, முழுமையாக போக்கவோ, நீக்கவோ முடியாது. நமது நடத்தையில், வாழ்க்கை முறையில் ஏற்படும்  மாற்றமே எதிர்மறைகளைக் குறைத்து வாழ்வை வளமாக்கும்.

11. ஒருவரின் ஜனன காலத்தில் மட்டுமல்லாது, நடக்கின்ற தசை, புத்தி, அந்தரங்களைக் கண்டு அதில் எந்த கிரகம் வலிமை இழந்துள்ளதோ, பாதிக்கப்பட்டுள்ளதோ, நீச்சம் அடைந்துள்ளதோ அதற்கான எளிமையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் வாழ்வில் வளம் பெற்று நலமுடன் வாழலாம். எப்படி ஒரு வண்டி வாகன பாதுகாப்பு, பயிர் பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு, கட்டிடப் பாதுகாப்பு எனப் பல பாதுகாப்புகளை எந்த விபரீதமும் நேரும் முன்னரே முன் எச்சரிக்கைக்காக அதற்கான பாதுகாப்பு கருதி இன்சூரன்ஸ் செய்து / எடுத்துக் கொள்கிறோமோ, அதுபோலவே நம் வாழ்வு சிறக்க இந்த எளிமையான பரிகாரங்களை, நம் பாதுகாப்பு கருதி முன்கூட்டியே செய்தல் நல்லது. 

12. சரி, இப்போது ஒவ்வொரு கிரகத்திற்குமான எளிமையான பரிகாரங்களைக் காணலாம். 

சூரியன் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-

1. பிரதி ஞாயிறன்று உபவாசம் இருக்கவும்.

2. கோதுமை, சிவப்பு பூ (செம்பருத்தி), சிவப்பு துணி, செப்பு பாத்திரம் இவற்றை ஞாயிறன்று தானமாக அளிக்கவும்.

3. சிவப்பு மற்றும் பிங்க் நிற ஆடைகளை தவிர்க்கவும். 

4. சிவப்பு பூ (செம்பருத்தி) உடன் நீர், கொஞ்சம் அரிசி மணிகளுடன் சிறிது சர்க்கரை இவை அனைத்தையும் ஒரு செப்பு பாத்திரத்தில் வைத்து தினமும் சூரியனுக்கு காலையில் படைக்கவும். 

5. ஞாயிறன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது. 

சந்திரன் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-

1. பிரதி திங்களன்று உபவாசம் இருக்கவும். 

2. வெள்ளை நிற உணவு வகைகளான அரிசி சாதம் , நெய் , தயிர், மோர், பால், ஜவ்வரிசி கிச்சடி போன்றவற்றை அதிகமாக உண்ணவும். 

3. அதிகமாக வெள்ளை நிற ஆடைகளை உடுத்தவும், எப்பொழுதும் உங்கள் உடலில் ஏதாவது ஒரு வெள்ளை ஆடை (உள் / வெளி ) இருப்பது நல்லது. 

4. சுண்டு விரலில் நல்முத்து மோதிரம் அணிய பரிந்துரைக்கப்படுகிறது.
 
5. திங்களன்று, மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.        

செவ்வாய் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-

1. பிரதி செவ்வாயன்று உபவாசம் இருக்கவும்; பகலில் ஒரு உணவு மட்டும் நல்லது.

2. ஹனுமான் பாதத்தில் கடுகு எண்ணைப் பூசவும் அல்லது கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றி அதனை அரச மரத்தடியிலோ அல்லது விநாயகர் / ஹனுமான் 
கோயிலிலோ, செவ்வாய்க்கிழமைகளில் வைக்கவும். 

3. சிவப்பு வண்ண ஆடைகள், சிவப்பு வண்ண காலணிகள், பணப்பைகள், பெல்ட்கள், தொப்பி இவைகளை தவிர்க்கவும். 

4. செவ்வாயன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

புதன்  வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ அல்லது அஸ்தங்கம் அடைந்திருந்தாலோ:-

1. பிரதி புதனன்று உபவாசம் இருக்கவும். 

2. பச்சை நிற ஆடையை புதன் அன்று தவிர்க்கவும். 

3. 5 - புதன் கிழமைகளுக்கு 5 - திருமணம் ஆகாத பெண்களுக்கு பச்சை வண்ண மலர்கள், பச்சை வண்ண பழங்கள், பச்சை நிற ஆடைகள், பச்சை நிற பேனாக்கள் அல்லது பென்சில்கள் தானமாக அளிக்கவும். 

4. 27 புதன் கிழமைகளுக்கு பசு மாட்டிற்கு பசுமை நிறத் தீவனம் அளித்து வரவும். 

குரு வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-

1. பிரதி வியாழனன்று உபவாசம் இருக்கவும்; 

2. ஒவ்வொரு வியாழனன்றும் 3 மஞ்சள் பழத்தையும் ஊறவைத்த கடலையும் பசு மாட்டிற்கு அளித்துவரவும். 

3. வியாழனன்று பருப்பு, தானியவகைளை தவிர்த்து காய்கறி, பழம், தயிர் ( YOGURT) மற்றும் பழ ரசங்களைப் பருகுவது நல்லது. 

4. மஞ்சள் நிற ஆடைகள் ஏதாவது ஒன்றை வியாழக்கிழமைகளில் பிராமணர்களுக்கு அளித்து வரவும். 

5.  வியாழனன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும், தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

சுக்கிரன் வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ:-

1. பிரதி வெள்ளியன்று உபவாசம் இருக்கவும்; 

2. வெள்ளியன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்தாமலும் , தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

3. பிரதி வெள்ளியன்று , துர்கா மந்திரங்களை சொல்லி துர்கா பூஜை செய்யவும். முடிந்தால், 5 திருமணமாகாத பெண்களுக்கு உணவளித்து, பழச்சாறு தரவும். 

4. அனைத்துவித நீல நிற ஆடைகள், மற்றும் வஸ்துக்கள் வெள்ளியன்று தவிர்க்கவும். 

5. பச்சை உருளைக்கிழங்கை மஞ்சள்தூள் கலந்து பசுவிற்கு அளிக்கவும். 

6. வெள்ளியாலான மிகச்சிறு பந்தினை எப்போதும் நீங்கள் பயன்படுத்தும் பை, பணப்பெட்டி, வீட்டில், அலுவலகத்தில் வைத்திருக்கவும்.

7. ஐந்து வெள்ளி அன்று திருக்கோவிலுள்ள யாரேனும் பெண்களுக்கு பால், அரிசி உணவு, சர்க்கரை கலந்த மிட்டாய் / BARFFI , வெள்ளை நிற ஆடைகளை அளித்து வரவும். 

8. ஓடும் நீரில், நீரோடை போன்றவற்றுள் நீல் நிற பூக்களை பிரதி வெள்ளியன்று விடவும். 

9.  ஏதேனும் ஒரு வெள்ளை கல் அல்லது பளிங்கு கல்லில் சந்தனம் பொட்டு வைத்து ஓடும் நீரில் விட்டு வரவும். 

சனி வலிமை இழந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டு இருந்தாலோ, நீச்சம் அடைந்து இருந்தாலோ   (ஏழரை  /  அஷ்ட்டம /  அர்த்தாஷ்டம சனி):-

1. பிரதி சனியன்று உபவாசம் இருக்கவும்.  

2. பிரதி சனியன்று யன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன் படுத்தாமலும் , தாம்பத்திய உறவு கொள்ளாமலும் இருத்தல் நல்லது.    

3. பிரதி சனியன்று அனைத்து வித கருப்பு  நிற ஆடைகள், மற்றும் கருப்பு  நிற வஸ்துக்கள் தவிர்க்கவும்.

4. பிரதி சனியன்று,  கடுகு எண்ணையை சனி பகவானுக்கு அளித்தோ அல்லது அதில் விளக்கேற்றியோ அல்லது அரச மரத்தடியில் அவ்விளக்கை வைத்தோ வரவும். 

5. குளிக்கும் நீரில் 7 சொட்டு கடுகு எண்ணெய்யை ஊற்றிக் குளித்து வரவும். 

ராகு பரிகாரம்:-

1. பிரதி சனியன்று உபவாசம் இருக்கவும். 

2. பிரதி சனியன்று,  கடுகு எண்ணெய்யைச் சனி பகவானுக்கு அளித்தோ அல்லது அதில் விளக்கேற்றியோ அல்லது அரச மரத்தடியில் அவ்விளக்கை வைத்தோ வரவும். 

3. பிரதி சனியன்று அனைத்து வித கருப்பு /நீல நிற ஆடைகள், மற்றும் கருப்பு / நீல  நிற வஸ்துக்கள் அணிவதையும், பிறரிடம் இருந்து பெறுவதையும், தவிர்க்கவும்.

4. மாதத்திற்கு ஒரு சனியன்று, அன்று செய்த முதல் சப்பாத்தியினை காகத்துக்கோ அல்லது கருப்பு நிற பசுவிற்கோ அளித்தல் நல்லது. 

5. மாதத்தில் ஏதாவது ஒரு நாளோ அல்லது சனியன்றோ ஏழை ஒருவருக்கு வயிறு நிறையும் (FULL MEAL)வரை அன்னமிடல் சால சிறந்தது. 

கேது பரிகாரம்:-

1. பிரதி செவ்வாயன்று உபவாசம் இருக்கவும்; பகலில் ஒரு உணவு மட்டும் நல்லது. 

2. ஹனுமன் பாதத்தில் கடுகு எண்ணைப் பூசவும் அல்லது கடுகு எண்ணெய்யில் விளக்கேற்றி அதனை அரச மரத்தடியிலோ அல்லது விநாயகர் / ஹனுமன் கோயிலிலோ, செவ்வாய்க் கிழமைகளில் வைக்கவும். 

3. பிரதி செவ்வாயன்று மாமிச உணவு, சாராய வஸ்துக்கள், புகையிலை போன்றவற்றை பயன் படுத்தாமல் இருத்தல் நல்லது.

4. ஏழை நோயாளி (மருந்து வாங்க இயலாதவற்கு ) எவருக்காவது, செவ்வாய் அன்று அவருக்கு தேவையான மருந்து வாங்கி அளித்தல் நல்லது. 

5.  முடியுமானால், எப்போதாவது வெள்ளை / கருப்பு நிற கம்பளி போர்வையை கோவில் / மசூதி / தேவாலயம் / குருத்துவார்  போன்றவற்றை உள்ள பூசாரிக்கு அளிக்கவும். 

6.  பல வண்ணம் கொண்ட பசு / நாய்க்கு சப்பாத்தி அளித்துவரவும். 

7.  வெள்ளை / கருப்பு எள்ளை சிறிது எடுத்து கருப்பு துணியில் சுற்றி ஓடும் நீரில் மூழ்கடிக்கவும். 

இவைகளே, வேத பரிகார முறைகளாக ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். இதற்கு சில / பல மாற்றங்களுடன் கூறுவோரும் உண்டு. 

மேலே கூறியவைகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் அந்தந்த கிரக பரிகாரமாக, அந்தந்த கிழமைகளில் தொடர்ச்சியாகச் செய்தல் நல்லது.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு - 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com