
திருமலையில் உள்ள வராக சுவாமி கோயில்.
திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலில் ஏப்ரல் 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஏழுமலையான் நிலைபெற இடம் அளித்தவர் ஆதிவராக சுவாமி. வெங்கடாசல புராணத்தில் இதுகுறித்த குறிப்புகள் உள்ளன.
மேலும், ஏழுமலையான் நிலை பெற வராக சுவாமி திருமலையில் நிலம் அளித்ததற்கான செப்புப் பட்டயமும் தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால், திருமலையில் சேத்திர சம்பிரதாயத்தின்படி, முதல் பூஜை, முதல் நைவேத்தியம், முதல் தரிசனம் எல்லாம் வராக சுவாமிக்கு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
ஏழுமலையான் கோயில் அருகில் உள்ள திருக்குளத்தில் வராக சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், மகா சம்ப்ரோக்ஷண விழா ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்குகிறது.
இதை முன்னிட்டு, ஏப்ரல் 22-இல் முளைவிடும் உற்சவம் நடைபெறுகிறது. ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரை கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
அன்றிரவு இரவு 7 முதல் 9 மணி வரை வராக சுவாமி மாட வீதியில் வலம் வர உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...