திருமலை திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் வாடகை அறை கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கோடை விடுமுறையையொட்டி, திருமலைக்கு கடந்த 2 நாட்களாக அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால், திருமலை முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தரிசன டிக்கெட் மற்றும் நேர ஒதுக்கீடு டோக்கன் பெறமுடியாமல் தர்ம தரிசன பக்தர்கள் 2 கி.மீ. தொலைவு வரை தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
மேலும், தங்குவதற்கு வாடகை அறை பெறுவதற்கும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாடகை அறைகள் நிரம்பியதை அடுத்து, வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாத பக்தர்கள், மரங்களின் நிழலில் தங்கினர். திருமலையில் உள்ள லேபாக்ஷி வளைவு வரை தரிசன வரிசை நீண்டதால், குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டனர்.
இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து, தகவல் பெற்ற விஜிலென்ஸ் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீர் விற்பனை செய்த ஊழியரைப் பிடித்து விசாரித்தனர். அவர், திருமலையில் உள்ள தனியார் உணவக ஊழியர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர், அவ்விடத்தில் தேவஸ்தானம் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.