செய்யாறு பேசும் பெருமாள் கோயிலில் 18-இல் கருட சேவை

செய்யாறை அடுத்த பெருநகர் செய்யாற்றில் கருட சேவை பெருவிழா வரும் சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது. நம்மாழ்வாரைப் போற்றும் வகையில், அவரது அவதார நாளை கொண்டாடும்
செய்யாறு பேசும் பெருமாள் கோயிலில் 18-இல் கருட சேவை


செய்யாறை அடுத்த பெருநகர் செய்யாற்றில் கருட சேவை பெருவிழா வரும் சனிக்கிழமை (மே 18) நடைபெறுகிறது. நம்மாழ்வாரைப் போற்றும் வகையில், அவரது அவதார நாளை கொண்டாடும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த கருட சேவை பெருவிழா நடத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பேசும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பெருநகர், மானாம்பதி, விசூர், தண்டரை, சேத்துப்பட்டு, இளநகர், இளநீர்குன்றம், தேத்துறை, சோழவரம், பெண்டை உள்ளிட்ட 15 கிராமங்களிலிருந்து உற்சவர்கள் கருட வாகனங்களில் செய்யாற்றில் எழுந்தருளச் செய்து அனைத்து சுவாமிகளையும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்வது போன்று உற்சவம் நடத்தப்பட்டு வருவது சிறப்பாகும். 
இவ்விழா செய்யாற்றில் வரும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் அதிகாலை வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (மே 17) இரவு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 
சனிக்கிழமை காலை கருட வாகனத்தில் பேசும் பெருமாள் வீதியுலா, இரவு செய்யாற்றங்கரையில் பேசும் பெருமாள் அனைத்து பெருமாள்களுக்கும், சுவாமி நம்மாழ்வாருக்கும் மரியாதை செலுத்துதல், அனைத்து திருத்தலங்களில் ஒருமித்த மகா தீபாராதனை நடைபெறும். 
அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மே 19) காலை கூழமந்தலில் வீதி உலாவும், மாலை அனுமந்த வாகனம், திருவீதி உலாவும் நடைபெறும். 
15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுவாமிகள் கருட வாகனங்களில் இரவு செய்யாற்றுக்கு வந்தடைந்தவுடன், அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று, சுவாமிகள் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அப்போது, அங்கு நம்மாழ்வார் எழுந்தருளி அனைத்து சுவாமிகளுக்கும் மாலை மரியாதையுடன் தனித் தனியாக மங்களாசாசனம் செய்து வைப்பார். மகா தீபம் ஏற்றிய பின்னர் சுவாமிகள் அந்தந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் செல்வர். இவ்விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வைணவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர்.
கருட சேவையில் பங்கேற்கும் உற்சவர்கள்: கூழமந்தல் பேசும் பெருமாள், பெருநகர் வரதராஜப் பெருமாள், மானாம்பதி சீனிவாசப் பெருமாள், தண்டரை லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளிட்ட சுவாமிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com