

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோயில் கட்ட 5.5 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்துக்கு உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு நன்கொடையாக வழங்கியுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட வெள்ளிக்கிழமை மாலை தன் குடும்பத்துடன் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வராக சுவாமியை தரிசித்து இரவு திருமலையில் தங்கினார். சனிக்கிழமை காலை, ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவருக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில் வேத பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலையான் பிரசாதம், படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். பின்னர், கோயிலில் இருந்து வெளியில் வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, திருமலையில் நடைபெற்ற ரத சப்தமி உற்சவத்தின் முதல் வாகனமான சூரியப் பிரபை வாகன சேவையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கள்ளக்குறிச்சி அருகே ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு, திருப்பதி தேவஸ்தானத்துக்கு 5.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த நிலத்தின் பத்திரத்தை சனிக்கிழமை அவர் சார்பில் நான் தேவஸ்தானத்திடம் ஒப்படைத்தேன்', என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.