சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

2020 மேஷ ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 - மேஷம்
சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 - மேஷம்

2020 மேஷ ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

ரத்தகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எடுத்த காரியத்தை கொடுத்த நேரத்தில் கச்சிதமாக முடிப்பவர்கள். தனது தோரணையால் அனைவரையும் வசீகரிப்பவர்கள். எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதவர்கள். தன்மானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். தைரியம் மிக்கவர்கள். பணத்தை விட பாசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கடினமான முட்பாதைகளையும் மலர்பாதைகளாக மாற்றும் வித்தை தெரிந்தவர். உங்களுடைய மன உறுதி வைரம் போன்றது. யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் சாதுர்யமுடையவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:

கிரகநிலை:

உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது தொழில் கர்ம ஜீவன ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய விரைய ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய சுக ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய களத்திர  ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் தொழில் ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார். ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த பெயர்ச்சியின் மூலம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள்கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து, பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள்.

வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.

அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

அஸ்வினி:

இந்த சனிப் பெயர்ச்சியில் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரணி:

இந்த சனிப் பெயர்ச்சியால் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  தைரியம் உருவாகும்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த பெயர்ச்சியால் வாக்குவன்மை உயரும். அதனால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீஷண்முகாய நம: என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com