கே.சி.எஸ்.ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையுங்கள். 
குருப் பெயர்ச்சி பலன்கள் - 2020
குருப் பெயர்ச்சி பலன்கள் - 2020

முதல் நான்கு (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) ராசிக்கான குருப் பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடையுங்கள். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில்  செய் தொழிலில் இருந்த தடைகள் தானாகவே விலகிவிடும். உற்றார் உறவினர்களுக்குப் நண்பர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். குழந்தைகள் உயர்கல்வி படிக்க எடுக்கும் முயற்சிகள் பலிதமாகும். புதிய உறவினர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப பேசி அவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். 

மனதிற்கினிய சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் தானாகவே தேடி வரும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பைத் தேடி பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மேலும் உங்களது ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 06.04.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் பெயர், புகழ், செல்வாக்கு உயரத் தொடங்கும்.

வருமானத்திலும் உயர்வைக் காண்பீர்கள். குறித்த காலத்திற்கு முன்பே செயல்களைச் செய்து முடித்து விடுவீர்கள். கஷ்டப்படும் உற்றார் உறவினர்கள் கீழே விழாமல் இருக்க முட்டுக் கொடுப்பீர்கள். சிலருக்கு புதிய வீடு பூமி வாங்கும் யோகமும் உண்டாகும். உங்கள் தன்னம்பிக்கை கூடும். நடையில் மிடுக்கும் முகத்தில் பொலிவும் உண்டாகும். உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சீராக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகையும் உதவிகளும் கிடைக்கும். 14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்கள் எடுத்தபடியே முடிவடையும். அதே நேரம் புதிய தொழில்களை தொடங்க வேண்டாம். ஒன்றுமில்லாத விஷயங்களில் மனம் புழுங்கி சீரியஸாக எடுத்துக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நீங்கள் இந்த காலகட்டத்தில் அவைகளிலிருந்து விடுபட்டு மன சாந்தியோடு காரியமாற்றுவீர்கள் என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களின் பேச்சுக்கு மேலதிகாரிகள் செவி சாய்ப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். அதே நேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல் சக ஊழியர்களின் நட்பைப் காப்பாற்றிக் கொள்ளுங்கள். விரும்பிய இடங்களுக்கு இடமாற்றமும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கு அனுப்பி உங்கள் பொருள்களை விற்க முற்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கினாலும் அவைகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். 

விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது. விளைச்சலில் பெருக்கத்தைக் காண்பீர்கள். அதே நேரம் புழு பூச்சிகளின் பாதிப்பு இருக்குமாதலால் அவைகளுக்குச் சிறிது செலவு செய்வீர்கள். சக விவசாயிகளுக்கு சிறு உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தரமாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். அதே சமயம் கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். கட்சியில் முக்கிய பிரமுகர்கள் மீது மனக் கசப்பு ஏற்படலாம். அதனால் பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவார்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இராது. புகழைத் தக்க வைத்துக் கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சக கலைஞர்களுடன் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களும் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். ஆன்ம பலம் பெற ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். 

பரிகாரம்:- ஸ்ரீமுருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

******
ரிஷபம் (கார்த்திகை 2-ஆம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கும் ஆதரவு கொடுப்பீர்கள். அரசு அதிகாரிகளும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலர் வெளிநாட்டுக்குப் பயணமாவார்கள். பொருளாதார நிலைமை சீரடையும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

பெற்றோர் வழியில் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். குறிப்பாக அன்னைக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படலாம். மற்றபடி தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளை தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் பெயர் கௌரவம் உயரும். மற்றபடி உங்கள் நடத்தையில் குற்றம் குறை காண முடியாத அளவுக்கு தெளிவாக நடந்து கொள்வீர்கள். 

6.4.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் புதிய திட்டங்களை நண்பர்களுக்கு விளக்கிவிட்டு அவைகளைச் செயல்படுத்துவீர்கள். வருமானத்துக்கு எந்தக் குறையும் வராது. உங்களின் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரத் தொடங்கும். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களும், குழந்தை பிறப்பும் உண்டாகும். 

குடும்பத்தின் தேவைகளையும் சிறப்பாகப் பூர்த்தி செய்வீர்கள். விருப்பமான இடங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். 14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் அனுபவஸ்தர்களை கலந்தாலோசிக்கவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். உங்கள் மனதை உடன் பிறந்தோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமாக சூழலில் இருப்பீர்கள். சக ஊழியர்களும் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவுக்கு சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இராது. விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். உங்கள் வேலைத்திறன் பளிச்சிடும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரித்து அந்தஸ்தும் உயரும். புதிய சந்தைகளைத் தேடிப்பிடித்து அங்கும் வியாபாரத்தை விரிவுபடுத்தி பலன்களைப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளையும் செய்யலாம். 

விவசாயிகள் விளைச்சலில் நன்மைகளைக் காண்பார்கள். பூமி லாபமும் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதே நேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு பூச்சிகளின் பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களைப் பெருக்கிக் கொள்ளும் காலமாக இது அமைகிறது என்றால் மிகையில்லை.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். பணவரவு இந்தக் காலம் முழுவதும் சரளமாக இருக்கும். 

கலைத்துறையினரைத்தேடி புதிய வாய்ப்புகள் வரும். பெயரும் மரியாதையும் சமூகத்தில் உயரும். கிடைக்கும் புதிய வாய்ப்புகள் உங்களின் திறமைக்கு சவாலாக  அமைவதால் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் பண வரவுகள், வண்டி வாகனச் சேர்க்கையும் உண்டாகும்.

பெண்மணிகள் அடுத்தவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கமாட்டார்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள்.  

மாணவமணிகளுக்கு அதிகம் உழைத்து புத்தி கூர்மையடைந்து நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள்.

பரிகாரம்:- ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வரவும்.

******

மிதுனம் (மிருகசீரிஷம்3ஆம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

20.11.2020 முதல் 05.04.2021 வரை உள்ள காலகட்டத்தில்  உங்களிடம் விரோதம் பாராட்டியவர்களே உதவி செய்ய முன் வருவார்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். செய்தொழிலை பாதகமின்றி நடந்துவீர்கள். இடையிடையே ஏற்படும் பிரச்னைகளை பொறுப்புடனும் பொறுமையுடனும் சமாளிப்பீர்கள். பழைய கடன்களை திருப்பி அடைக்கத் தொடங்குவீர்கள். அவசியமான செலவுகளை மட்டும் செய்வீர்கள். அரசு தொடர்பான வேலைகளில் நிதானமாகச் செயல்பட்டு வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். மற்றபடி உங்களின் ஹாஸ்யப் பேச்சினால் எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், சாதுர்யமாகப் பேசி சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியமும் மன நலமும் மேம்பட யோகா பிராணாயாமம் போன்றவைகளைக் கற்பீர்கள்.

6.4.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் "செய்வன திருந்தச் செய்' என்கிற பழமொழிக்கு ஏற்ப அனைத்து செயல்களையும் கவனத்துடன் செய்து முடித்துவிடுவீர்கள். பிரச்னைகளை நண்பர்களின் உதவியால் சமாளிப்பீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் தயவை நாடி வருவார்கள். உங்களின் மன உறுதி கூடும். தொழிலை மாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான புதிய மாற்று வழிகள் புலப்படும். பண நடமாட்டம் நன்றாக இருக்கும். 

புதிய பொறுப்புகளையும் ஏற்று திறம்பட நடத்தும் காலகட்டமிது. 14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். அதே நேரம் உங்கள் செயல்களில் எச்சரிக்கை உணர்வு நிச்சயம் தேவை. கணக்கு வழக்குகளையும் சரியாக வைத்துக் கொண்டு அரசுக்கு சமர்ப்பிக்கவும். மற்றபடி செய் தொழிலில் வாய்ப்புகள் குவியும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களைச் செய்ய நேரிடும். உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து காரியங்களைச் செய்யும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் நன்றாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் குறைகளைக் காண்பார்கள். அதே சமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கி பணியாற்ற வேண்டி வரும். 

வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை காணப்படும். வங்கியில் கடன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வியாபாரிகளின் வட்டாரத்தில் மதிப்பு மரியாதைகள் உயரக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தை அடைவீர்கள்.

விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். அதேநேரம் பூச்சிக் கொல்லி மருந்துக்கும் செலவு செய்ய வேண்டி வரும். மேலும் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்குச் சற்று செலவு செய்ய வேண்டியிருக்கும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு  உங்களைப் பொருத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். பேசும் சமயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். 

கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் வேலைகளைக் குறிப்பிட்டது போல் செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமைகளை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் உங்கள் வெளி வட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களிடம் சச்சரவு இல்லாமல் நடந்து கொள்ளவும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும், அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். ஆன்மிக சுற்றுலா சென்று வர ஏற்பாடு ஆகும்.

 மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம், விளையாட்டில் உற்சாகம் இரண்டும் உண்டாகும். ஆத்ம ஒளி பெற யோகா, பிராணாயாமம் போன்றவைகளில் ஈடுபடுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களிடம் அனுகூலமானப் போக்கை கடைப்பிடித்து அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம்:- ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.

******

கடகம் (புனர்பூசம்4-ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

20.11.2020 முதல் 5.04.2021 வரை உள்ள காலகட்டத்தில்  உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க ஆதரவு கொடுத்து, அவர்களை உங்களுக்கு முழுமையான உதவிகரமாக இருக்க பயன்படுத்திக் கொள்வீர்கள். அரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சிகரம் போன்று ஜொலிப்பீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து செய்தொழிலை விரிவுபடுத்துவீர்கள். திடீர் தன யோகம் உண்டாகும். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நெடுநாளாக விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அசையாச் சொத்துகளும் இந்த கால கட்டத்தில் விற்பனையாகும். 

6.4.2021 முதல் 13.09.2021 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நண்பர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய தொழிலிலும் இறங்குவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். எதிர்பாராத பல நன்மைகள் தானாகவே நடக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து, புதிய தெளிவான சிந்தனைகள் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். 

புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு அதற்கான முயற்சிகளைச் செய்யும் காலகட்டமிது. 14.09.2021 முதல் 20.11.2021 வரை உள்ள கால கட்டத்தில் சுறுசுறுப்புடனும், விடா முயற்சிகளுடனும் கடமைகளைச் செய்வீர்கள். வெளியூர் தொடர்பான விஷயங்களில் இருந்த தடை, தாமதங்கள் விலகிவிடும். வெளியூர், வெளிநாட்டிலிருந்து சுபச் செய்திகளும் வந்து சேரும். வருமானம் கூடி சேமிப்புகளும் உயரும். குடும்பத்திலும் ஒற்றுமை ஓங்கும். பெற்றோருடனும் உறவு நன்றாக இருக்கும். பிரச்னைகளை வழக்கு நிலைக்குச் செல்லவிடாமல் சமரசமாகப் பேசித் தீர்த்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இந்தக் குரு பெயர்ச்சி காலத்தில் பதற்றப்படாமல் அமைதியாக அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தையும் பெறுவீர்கள். அலுவலகத்திலிருந்த கெடுபிடிகள் குறையும். தெரியாத வேலைகளை சக ஊழியர்களைக் கலந்தாலோசித்து செய்து முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உங்கள் மனதுக்கு விருப்பமான இடமாற்றத்தையும் காண்பீர்கள். 

வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த நிலைமாறி கொடுக்கல் வாங்கல் கைகொடுக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடைந்து பொருளாதார நிலை உயரும். இதனால் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உங்கள் பொருள்களை பல சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வீர்கள். 

விவசாயிகள் சுலபமாக உழைத்து விவசாயத்தையும் பெருக்குவீர்கள். விளைச்சல் அதிகரித்து நல்ல லாபத்தை காண்பீர்கள். உங்களின் செயல் திறமை கூடும். புதிய குத்தகைகள் தானாகத் தேடி வரும். சக விவசாயிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். 

அரசியல்வாதிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் சிறப்பாக அமையும் கட்சி பணிகளில் முழு ஈடுபாடு உண்டாகும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் முனைப்பான நடவடிக்கைகளால் கட்சி மேலிடத்தை கவருவீர்கள். சிலருக்கு கட்சியில் உயரிய பொறுப்புகள் கிடைக்கும். 

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். சக கலைஞர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். பொருளாதாரம் உயரத் தொடங்கும். அனுபவஸ்தர்களிடம் சென்று புதிய தொழில் நுட்பங்களைக் கற்பீர்கள். உங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் தேடி வரும். 

பெண்மணிகளுக்கு மகிழ்ச்சிகரமான குடும்ப சூழல் நிலவும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் பொறுமையை அனைவரும் பாராட்டுவர். குழந்தைகளுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவமணிகள் கடினமான காரியங்களையும் சுலபமாக முடித்து  நற்பெயர் எடுப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். நண்பர்கள் உங்களை மதித்து நடப்பார்கள். பல்கலைக்கழகத்திலிருந்து கல்வி உதவித்தொகை கிடைக்கும். சிலருக்கு மாணவர் தலைவர் பதவி கிடைக்கும். ஆசிரியர்களுக்கு நெருக்கமாவீர்கள். 

பரிகாரம்:-ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com