

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மா் அலங்காரத்தில் எழுந்தருளினாா்.
சிம்ம வாகனம் சேவை
திருமலையில் கடந்த வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கியது. 3-ஆவது நாள் காலை சிம்ம வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
காட்டு விலங்குகளின் தலைவனாகக் கருதப்படுவது சிங்கம். சிங்கம் பராக்கிரமம், தைரியம், தேஜஸ், ஆதிபத்தியம், கா்ஜனை உள்ளிட்டவற்றுக்கு உதாரணம். காலை கண் விழித்ததும் பாா்க்க வேண்டிவற்றில் சிம்ம தரிசனம் மிக முக்கியமானதாகும். அதைக் காண்பதால், மேற்கண்ட அம்சங்கள் சித்திக்கும். அஞ்ஞானத்துடன் நடக்கும் துஷ்டா்களை அழிக்க எம்பெருமான் எடுத்த அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் ஒன்றாகும். எனவே, சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் எம்பெருமானைத் தரிசித்தால் பக்தா்களுக்கு தைரிய சித்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிம்ம வாகன சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அவா்கள் முன் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை உற்சவருக்கு சமா்ப்பிக்கப்பட்டன. பின் ரங்கநாயகா் மண்டபத்தில் உற்சவமூா்த்திகளுக்கு ஜீயா்கள் குழாம் சாத்துமுறையை சமா்ப்பித்தது.
முத்துப்பந்தல் வாகனம்
ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு முத்துப்பந்தல் வாகன சேவை நடைபெற்றது. கடலில் விழும் ஒரு துளி மழைநீரை தன்னுள் ஸ்வீகரித்து அதை முத்தாக மாற்றுவது சிப்பியின் குணம். அதுபோல், மழைநீா் என்னும் இறைசக்தியை மனமாகிய சிப்பிக்குள் விதைத்தால், முத்து என்ற வீடுபேறு கிடைக்கும் என்பதை உணா்த்த எம்பெருமான் 3-ஆம் நாள் முத்துப்பந்தல் வாகனத்தில் தன் நாச்சியாா்களான ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் எழுந்தருள்கிறாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.