திருமணப் பொருத்தம் பார்ப்பதில் இவ்வளவு இருக்கா?

ஆம், திருமணப் பொருத்தத்தில் நிறைய இருக்கவே செய்கிறது. திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அது பற்றி விரிவான விளக்கத்தைக் காண்போம். 
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் இவ்வளவு இருக்கா?

ஆம், திருமணப் பொருத்தத்தில் நிறைய இருக்கவே செய்கிறது. திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அது பற்றி விரிவான விளக்கத்தைக் காண்போம்.

திருமணப் பொருத்தம் என்றால் இரு வரன்களுக்கிடையே ஆன நட்சத்திர பொருத்தம். செவ்வாய் தோஷ பொருத்தம், இருவரின் தசை, ஆபத்தான தசை சந்திப்புகளில் இருக்கிறதா என அறிதல், தம்பதியினர் இடையே ஏற்படும் பிரிவினையை முன்கூட்டியே அறிவிக்கும் தோஷ சாம்யம் எனும் பாவ சாம்யம் அறிதல், லக்கினம் மற்றும் ராசிக்கிடையே ஆன 6க்கு எட்டாக (ஷஷ்டாஷ்டக தோஷம்) உள்ளதா என அறிதல், முக்கியமாக அறியும் யோனி பொருத்தம் காணல் அதன் விரிவான கரணம் பொருத்தம் அறிதல். இவை அத்தனையையும் பெரியவர்களால் நிச்சயிக்கப்படுகிற திருமணத்திற்கு மட்டுமே காணுதல் அவசியம் ஆகிறது. ஆனால் அனைத்தும் தற்போது பார்க்கிறார்களா அல்லது பெற்றோரின் அவசரத்தால் விட்டுவிடுகின்றனரா என்பது சரியாகத் தெரியவில்லை. 

பிறகு திருமணம் நன்கு நடத்தி முடித்து, ஏன் சிலர் குழந்தை பெற்ற பின்னரும் கூட பிரிய விரும்புவது விதியா அல்லது மதியா எனக் கேட்கத்தோன்றும். என்னைக்கேட்டால் மதி தான் என்பேன். விதியை மதியால் வெல்லலாம் என்பதனை ஏன் மறந்தனர் எனக் கேட்கத் தோன்றும். அனைத்தும் பார்த்த பின்னர் நடக்கும் எங்கோ ஓரிரண்டு திருமணத்திற்குப் பின் ஏற்படும் பிரிவினைக்கு காரணம் ஜோதிடம் அல்ல. ஜோதிடரே தான். காரணம், பொருத்தம் பார்த்தலில் ஏற்படும் தவறுக்கு ஜோதிடர் மட்டுமே காரணம் ஆவார். பிறப்பு குறிப்புகள் சரியாக இருந்தால் மட்டுமே சரியான பொருத்தம் பார்க்க முடியும். 

ஒரு துணி எடுக்க, பொருள் வாங்க நாள்முழுவதும் செலவிடும் மக்கள், ஏனோ திருமணப் பொருத்தம் காணும்பொழுது மட்டும் அவசரப்படுகின்றனர். சிலர் அதனைக் கருத்தில்கொள்வதே இல்லை எனும்போது மணமக்களின் பெற்றோர் திருமணம் செய்விப்பது என்பதனை, கடன் தீர்ந்ததாக நினைக்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

காந்தர்வ திருமணம் எனும் காதல் திருமணத்திற்கு, மேற்படி பொருத்தம் காணவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களின் திருமணத்தை, ஒரு சுப முகூர்த்த நாளில் இறைவனின் சன்னதியில் ஏற்பாடு செய்து திருமணத்தைச் செய்து முடித்து இருவீட்டாரின் வரவேற்பை மணமக்களின் இருவீட்டார் பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு வரவேற்பை நடத்துவது சாலச்சிறந்தது.

குறிப்பாகக் காதல் திருமணத்தைப் பற்றி ஆராயும் போது 5, 7ம் இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனென்றால்  மனத்தில் ஏற்படக் கூடிய ஈர்ப்புத் தன்மையைக் குறிப்பது 5ம் இடமாகும். களத்திர ஸ்தானமான 7ம் இடம் திருமணத்தைக் குறிக்கக் கூடியதாகும். 5, 7க்குரிய அதிபதிகள் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தத்துடனிருந்தால், மனதளவில் ஈர்ப்புத் தன்மை உண்டாகிக் காதல் கைகூடித் திருமணத்தில் முடிகிறது. ஆக 5, 7க்கு அதிபதிகள் இணைவது, பார்த்துக்கொள்வது, பரிவர்த்தனை பெறுவது, காதல் திருமணத்தை ஏற்படுத்தும்.  இது போல் காதல் திருமணத்தை ஏற்படுத்தும் விதிகளை ஆய்வு செய்தால், திருமணத்தின் போது ஏற்படும் பல தடைகளை முன்னரே அறிந்து பிரச்னையை தடுக்கலாம்.

திருமண பொருத்தம் என்பது என்ன? அது எது எதற்காகப் பயன்படும்? 

வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பவர்களும் உள்ளனர். அதில் 6 அல்லது 8 வந்தவுடன் பொருத்தம் சரியே எனச் சொல்பவரும் உள்ளனர். அனைத்தும் பார்ப்பவர்களும் உள்ளனர். ஜோதிடர்களை நான் குறை கூறமாட்டேன் காரணம் நானும் ஜோதிடன் என்பதால் மட்டும் அல்ல.

இன்றைய சூழலில் எங்கெல்லாமோ அமைதி காத்துவிட்டு இந்த திருமண பொருத்தத்தில் மட்டும் அவசரப்படுத்தும் நபர்களை என்னவென்று சொல்வது. ஜோதிடரின் அனுபவம் மற்றும் ஜோதிடரின் மேல் வைக்கும் நம்பிக்கை இவைகள் இதில் முக்கிய பங்காற்றுகின்றன.

சிலர் ஒரே ஜோதிடரின் கருத்துக்களைக் கேட்டு தனது பிள்ளைகளின் திருமணத்தை 10 வருடங்களுக்கு மேல் வெறுமனே நகர்த்தியதையும் நான் பார்த்திருக்கிறேன். சாதாரண ஒரு உடலின் பிரச்னைக்கே இரண்டு மூன்று மருத்துவரிடம் கருத்துக் கேட்கும் நாம். ஏன் திருமண விஷயத்தில் மட்டும் ஒரு ஜோதிடரையே நம்பி சிலர் வாழ்வை வீணடிக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இனி, திருமணப்பொருத்தம் பற்றி விரிவாகக் காண்போம்.

1.   நட்சத்திர பொருத்தம்

1. தினப் பொருத்தம்: தம்பதியினரிடையே ஒற்றுமையை அறிவது ராசி பொருத்தம், யோனிப் பொருத்தம் இருந்து, இந்த தினப் பொருத்தம் இல்லாமல் இருந்தால் கவலை இல்லை.

2. ராசி பொருத்தம்: கணவன் - மனைவி இருவரின் நீண்ட வாழ்வுக்கு, உறுதியளிப்பது இது. கணப்பொருத்தம் இல்லாத போது இது தீர்வு.

3. ராசி அதிபதி பொருத்தம்: நீண்ட ஆயுள் மற்றும் தம்பதிக்குள் பிறக்கும் குழந்தைகளின் அதிர்ஷ்டம், இதனை அறியமுடியும். ஜாதகத்தில் சம சப்தமம் ஒற்றுமை மற்றும் மாகேந்திர பொருத்தம் இருப்பின், இது இல்லை எனில் சரியே. ஆண் பெண் இருவருக்கும் சம சப்தம லக்னம், சம சப்தம ராசியாக இருந்தாலும் ஈர்ப்பு உண்டாகும்.

4. வசியப்பொருத்தம்: தம்பதியரிடையே உள்ள அன்பு, அரவணைப்பு மிக முக்கியமாகும். ராசி மற்றும் கணம் இல்லை எனில் இது சரி செய்யும்.

5. கணப்பொருத்தம்: ஆன்மீக மற்றும் மன ஒற்றுமையை குறிக்கும். தம்பதியின் வாழ்க்கை மிகவும் நிம்மதியாகவும், செழிப்பாகவும் இருக்க இது உதவும்.

6.  மாகேந்திர பொருத்தம்: தன்னுடைய மனைவி / கணவர் மற்றும் குழந்தைகளின் நேர்மை, பொருளாதாரம், உடல் ரீதியாகப் பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவது ஆகும். ராசி அதிபதி மற்றும் தினப் பொருத்தம் இல்லாத போது, இது சரி செய்யும்.

7.  யோனி பொருத்தம்: பால் உறவுக்கேற்ற அடையாளம். இது சிறப்பாக இருப்பின், பொருளாதார, செல்வாக்கு, சந்தோஷ மணவாழ்வு உண்டாகும். இது இல்லை எனில், தம்பதியினரிடையே, திருப்தி இன்மை, குழந்தைகள் உறவில் பிரச்னை தோன்றும். ராசி அதிபதி / வசியம் / மகேந்திரம் இந்த மூன்று பொருத்தத்தில் இரண்டு இருந்தால், இது (யோனி பொருத்தம்) இல்லையெனில் பிரச்னை இல்லை.

8. ஸ்த்ரீ தீர்க்கம்: நீண்ட மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வு கணப் பொருத்தம் இல்லாத போது இது தீர்வாகும்.

9.  ரஜ்ஜு பொருத்தம்: தோஷங்களில் மிக முக்கியமானது பல எதிர்பாராத துன்பங்களுக்கு இது இல்லாமையே காரணமாகும். இந்த பொருத்தம் மிக அவசியமாகிறது. இந்த பொருத்தம் இல்லை எனில், ஜோதிட ரீதியாக திருமணம் சிபாரிசு இல்லை.

10. வேதை பொருத்தம்: இது ஒரு தோஷம் ஆகும். இருவரின் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று வேதை ஆனால், ஜோதிட ரீதியாக திருமணம் சிபாரிசு இல்லை.

2.  செவ்வாய் தோஷ பொருத்தம்

இதனை லக்கினத்திலிருந்து , சந்திரனிலிருந்து (ராசியிலிருந்து) மற்றும் சுக்கிரனிலிருந்து 1, 2, 4, 7, 8  12 இல் செவ்வாய் இருப்பின் தோஷம். இதில் கடுமையும் உண்டு. இதற்குப் பல விதி விலக்குகள் உண்டு. இதனை 30 வயதிற்கு பிறகும், இரண்டாம் திருமணத்திற்கும் பார்ப்பது அவசியமாகாது.

3. தோஷங்களற்ற பொருத்தம்

பலவகை தோஷங்கள் உள்ளது. அதில் சர்ப்ப தோஷம், காலசர்ப தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவை மிக முக்கியமானவை. இவை புத்திர தோஷத்தையும், பெண்ணிற்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறவிடாமல் தடுக்கும். தம்பதியினரில் ஒருவரைப் பிரிக்கவும் செய்யும்.

4. ஷஷ்டாஷ்டக பொருத்தம்

பெண்ணின் லக்கினத்திலிருந்தும், ராசியிலிருந்து இதனைக் காணவேண்டும். பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி 6 ஆகவோ அல்லது 8 ஆகவோ இருக்கக்கூடாது. இதுவும் தம்பதியினரைப் பிரிக்கக்கூடும்.


5. ஆபத்தான தசை சந்திப்பு உண்டா / இல்லையா எனக் காணல் 

இதைத் திருமணம் நடைபெறுவதிலிருந்து சுமார் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலும் காணுதல் அவசியமாகிறது. இருவருக்கும் பாதகாதிபதியின் தசையா, அஷ்டமாதிபதியின் தசையா அல்லது ரோகாதிபதியின் தசையா என காண்பது. திருமணம் ஆனவுடன், உடனடியாக பிரச்னையை எதிர்கொள்ளாதிருத்தலே இதன் முக்கியமாகும்.

6. தோஷ சாம்யம் / பாவ சாம்யம்

இது நிச்சயம் தம்பதியினரிடையே ஏற்படும் பிரிவினையை முன்கூட்டியே தெரியப்படுத்த உதவும். இதில் பெண்ணுக்கு தோஷம் அளவு அதிகமாக இருக்கக்கூடாது. இருவருக்கும் சமமாகவோ அல்லது ஆணுக்கு அதிகமாகவோ இருத்தல் அவசியமாகிறது. இதனை விரிவான முறையிலும் ஆழ்ந்து ஆய்வு செய்தலையும் நான் காணுகிறேன். தோஷம் தரும் கிரகங்கள் - உச்சமாக ஜாதகத்தில் இருந்தால் தோஷம் செய்வதில்லை. அதுபோல் நட்பு மற்றும் ஆட்சி இடத்திலிருந்தால் அதன் தோஷ அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனைத் தீர ஆய்வு செய்து முடிவெடுத்தல் அவசியமாகிறது.

7. கரணப் பொருத்தம்

எப்படி யோனி பொருத்தம் முக்கியமோ இதுவும் அதனை இன்னும் தெளிவாக எடுத்துக் கூறுவதாகும். இது தம்பதியினரின் இன்ப நிலை பெறும் - இடம் மற்றும் நேரம் போன்றவற்றை மறைமுகமாக எடுத்து இயம்பும்.

8. குழந்தை பாக்கியம் உண்டா? இல்லையா? என பீஜ ஸ்புடம் மற்றும் ஷேத்திர ஸ்புடம் காணுதல்

இந்தப் பொருத்தம் மட்டும் மற்றைய பொருத்தம் அனைத்தும் சரியாக வந்த பின், இருவீட்டாரும் சம்மந்தம் பேசும் முன் பார்த்தால் நல்லது என்பேன். இருவருக்கும் இயற்கையிலேயே குழந்தை பெறும் பாக்கியம் உண்டா அல்லது மருத்துவ ரீதியாக மற்றும் பரிகாரம் செய்த பின் பெறும் பாக்கியம் உண்டா என அறிந்தால், முன்பாகவே எச்சரிக்கையுடன் இருவரையும் சேர்ப்பதைத் தவிர்த்தலையோ அல்லது சிறப்பான மருத்துவச் சிகிச்சை பெறவோ ஏதுவாகும் என்பது சாத்தியமாகும்.

9. திருமணத் தடைக்கான தோஷங்கள்

புணர்ப்பு தோஷம், பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றவை திருமணத்தைத் தடை செய்யும் தோஷங்களாகும். இதனை ஆராய்தல் நன்று.

10. குலதெய்வ சாபம் / தோஷம் உள்ளதா என அறிதல்

ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்தால், அவரின் முப்பாட்டனார் காலத்திலிருந்தே குலதெய்வ வழிபாடு நடப்பதில்லை என அறியமுடியும். அத்தோடு அவர் சரியான குலதெய்வத்தை தான் வணங்குகிறாரா அல்லது தவறான குலதெய்வ வழிபாட்டைச் செய்கிறாரா என ஜனன கால ஜாதகத்தை ஆய்வு செய்து கூறலாம்.

சில கிரக சேர்க்கைகள், இருதார அமைப்பை வெளிக்காட்டும். அதனை, அறிந்து பொருத்தம் பார்த்தால், நன்மை பயக்கும். அதே போல் ஆணுக்கு ஏற்படும் தனி தோஷம் மற்றும் பெண்ணிற்கு ஏற்படும் தனி தோஷம் இவற்றை ஆய்வு செய்தல் அவசியமாகிறது.

கணவன் மனைவியிடையே, வாழ்ந்து கழிப்பது என்பது வேறு, வாழ மறுப்பது என்பது வேறு, வாழப் பயப்படுவது என்பது வேறு. ஒருவரின் ஜாதகத்தில் மனோகாரகரான சந்திரன், புத்தி காரகரான புதன், ஆத்ம காரகரான சூரியன், ஆத்மாவின் பிரதிநிதியாகிய லக்கினம் உள்ள ராசியில், இன்னொருவரின் ஜாதகத்தில், செவ்வாய், ராகு, கேது இருந்தால், ஒருவருக்கு மற்றவர் மேல் பயம் ஏற்படும். ஒருவரின் 5ஆம் அதிபதி உள்ள ராசியில் இன்னொருவருக்கு ராகு, கேது இருந்தாலும் ஒருவருக்கு மற்றவர் மேல் காரணம் தெரியாத பயம் இருக்கும். ஏனெனில், 5ஆம் இடம் உணர்ச்சியைத் தூண்டும் ஈர்ப்புத் தன்மை கொண்ட இடம் ஆகும்.

சர்வாஷ்டக பரல்கள் மூலம் இதனை 7 மற்றும் 12ஆம் இடங்களில் பெறும் பரல்களைக் கொண்டும் அறியலாம். இவை இரண்டில் ஒன்றில் இருப்பதைவிட வேறொன்றில் இருமடங்கு இருப்பின், நிச்சயம் திருமண வாழ்வில் தோல்வி தான் என அறிய முடிகிறது. இவை அனைத்தையும், மனித சமுதாயம் முன்கூட்டியே அறிந்து செயல்பட நமக்குக் கிடைத்த பொக்கிஷம் "ஜோதிடம்" என்றால் மிகை ஆகாது.

சில பரிகாரங்கள்

1. செவ்வாய் தோஷம் உள்ளதென்று முடிவானால், (செவ்வாய் தோஷ விலக்குகள் நீங்கலாக) செவ்வாய் தோஷம் உள்ளவரையே இணைப்பது சரியான பரிகாரமாகும். விதிவிலக்குகளை அறியாமல் சிலர் தாமே முடிவெடுப்பது தவறு.

2. புத்திர தோஷம் உள்ள ஜாதகத்தை, புத்திர தோஷம் இல்லாத ஜாதகத்துடனே இணைக்கவேண்டும்.

3. வேறு தோஷங்கள் இருப்பின் அதற்குத் தக்க பரிகாரம் செய்து பின்னர் திருமணம் செய்வது நல்லது.

4. குல தெய்வ வழிபாடும், பித்ரு கர்மா சரிவர செய்துவருபவர் இல்லங்களில் திருமணம் தடையோ வேறு சில பிரச்னைகளோ இருக்கவே இருக்காது. அதனை மனதில் கொண்டு சரியான குலதெய்வ வழிபாடு செய்தல் அவசியம். அத்துடன் பித்ரு கர்த்தாக்களைச் செய்து, தக்க வழியில் நமது பித்ருக்களை (நமது உறவில், இறந்த அனைவரும் இதில் அடங்குவர்) சாந்தப்படுத்துதல் அவசியமாகிறது.

5. எந்தவித தோஷமாக இருப்பினும், சிவனை அதுவும் பிரதோஷ சிவனை வணங்குவதென்பது அனைத்து தோஷங்களைப் போக்க உதவும் சரியான பரிகாரம் ஆகும்.

இத்தனையையும் கண்டு பின்னர் தகுந்த பரிகாரங்கள் இருப்பின் அவற்றைச் செய்யச் சொல்லி பின்னர் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்வில் பல மங்கலங்கள் நடந்து, வெகு நாள்கள் அன்பான தம்பதியினராய் வாழ்ந்து, நன் மக்களைப் பெற்று வளமுடன் வாழ்வார்கள் என ஆணித்தரமாகக் கூறமுடியும்.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com