புத்தி சாதுரியத்துடன் செயல்படுபவர்கள் இவர்கள்: வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 14 - மே 20) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 
வாரப் பலன்கள்
வாரப் பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வாரப் (மே 14 - மே 20) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகள் வரும். சகோதர, சகோதரிகளுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். . ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்காது. கூட்டாளிகளை நம்பி புதிய முதலீடுகளில் ஈடுபடாதீர்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகளில் ஈடுபடாதீர்கள். விளைச்சல் திருப்திகரமாகவே இருக்கும். கால்நடைகளை நன்கு பராமரிக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு ஓங்கும். கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினரது திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

பெண்மணிகள் எதிலும் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் நன்மை கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதிய ஆடை அணிகலன்கள் சேர்க்கை நிகழும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். அனுகூலமான  தினங்கள்: 14, 15. சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பூர்வீகச் சொத்து விஷயமாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுமூக நிலை உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களின் ஆதரவினால் சற்று வேலைப் பளு குறையும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் வருமானம் திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சுமூகமாக முடியும். 

அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தில் உங்களுக்கு ஆதரவு நன்றாக இருக்கும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் சிறு தடைகள் ஏற்பட்டு விலகும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 

பரிகாரம்: ஸ்ரீகுருவாயூரப்பனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 14, 16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். உயர்ந்தவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கடின உழைப்பால் உடல் நலம் பாதிப்புக்குள்ளாகும். கால்நடைகளை நன்கு பராமரித்து வரவும். 

அரசியல்வாதிகள் மேலிடம் இடும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். கலைத்துறையினருக்கு உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொடுப்பதில் சிரமங்கள் ஏற்படும். 

பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவீர்கள். தேவைக்கேற்ற பண வரவு இருந்தாலும் செலவு அதிகரிக்கும். மாணவமணிகள் அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படித்து வரவும்.

பரிகாரம்: ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 16. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

ஆன்மிகச் சிந்தனைகளால் புதிய நம்பிக்கையைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சிறு தடைகள் ஏற்பட்டாலும் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றி முடிப்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை நாடிச் செல்ல வேண்டாம். எல்லோரிடமும் சுமூகமாகப் பழகவும். வியாபாரிகள் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். பலவகையிலும் உங்களைத் தேடி வருமானம் வரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கால்நடைகளுக்காக செலவு செய்ய நேரிடும். 

அரசியல்வாதிகள் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள். கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஆதரவு இருக்காது. அதிக முயற்சிகளுக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். 

பெண்மணிகள் குடும்பத்தினருடன் சுமூகமாகப் பழகவும். பிறர் கோபப்படும் படியான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். மாணவமணிகள் ஆசிரியரின் பேச்சைக் கேட்டு நடக்கவும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். ஆத்ம பலம் பெற யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் அந்தஸ்து, கெளரவம் மேலோங்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஸ்பெகுலேஷன் மூலம் சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். உடல்நலம் சீராகும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரவுடன் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் சற்று அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன் வசூலாகும். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள். உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகளின் சொற்களுக்கு மதிப்பு உண்டாகும். பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சித் தலைமை புதிய பதவிகளைக் கொடுத்து கெüரவப்படுத்தும். கலைத்துறையினருக்கு பணவரவு சரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். 

குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிறையக் காண்பீர்கள். குழந்தைகளால் குதூகலம் உண்டாகும். கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் சீரிய முயற்சி செய்து படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். விளையாட்டிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 14, 17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். மனதில் எதையோ இழந்து விட்டதைப் போன்ற எண்ணம் உண்டாகும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கவனம் உங்கள் மீது இருக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடவும். நேரடியாக விற்பனையில் கவனம் செலுத்தினால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி நன்றாக இருக்கும். கால்நடைகளைக் கவனத்துடன் பராமரித்து வரவும். அவைகளால் லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றியடைவீர்கள். கட்சியில் மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறையினருக்கு புதுப் புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள். 

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் சிறு பிரச்னைகளும், குழப்பங்களும் உண்டாகும். சாதுர்யத்துடன் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் சற்று கவனக் குறைவு ஏற்படும். விளையாட்டில் கவனமாக ஈடுபடவும்.

பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 15, 18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் முடிவடையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்தி வெற்றி காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு தானிய விற்பனை லாபகரமாக இருக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். நீங்கள் தீட்டும் அனைத்துத் திட்டங்களும் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஆதரவு இருக்காது. அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள்.

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவமணிகள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு விடுவீர்கள். எதிர்வரும் இடையூறுகளைச் சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 16, 18. 

சந்திராஷ்டமம்: 14.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சுபச் செய்திகள் உங்களைத் தேடி வரும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். வேலைப் பளு குறையும். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி வியாபாரத்தில் ஈடுபடாதீர்கள். தனித்தே நின்று வியாபாரத்தை விரிவு படுத்துங்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பீர்கள். பொறாமைக்காரர்களுக்கு மத்தியில் முன்னேறிக் காட்டுவீர்கள். கால்நடைகளுக்கு செலவு செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த சிறப்பான பதவியை கட்சி மேலிடம் தரும். அதற்கேற்றாற்போல் உங்கள் கடினமான உழைப்பில் முன்னேறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வருவது சற்று கடினமாக இருக்கும். சக கலைஞர்களுக்கும் உதவி செய்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவமணிகள் வீணாகப் பொழுதைக் கழிக்காமல் அறிவு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவது நல்லது. 

பரிகாரம்: ஸ்ரீ முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14, 18. 

சந்திராஷ்டமம்: 15, 16.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் சற்று தொய்வு ஏற்படும். மனதில் ஏற்படும் பயங்களும், கவலைகளும் மற்ற வேலைகளில் இடையூறு ஏற்படுத்தும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவதும் அவசியம். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தைப் பெறுவீர்கள். அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் எவருக்கும் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்கவேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். மகசூல் திருப்திகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகளிடம் தொண்டர்கள் சற்று விலகி இருப்பார்கள். சிறிய வெற்றிகளால் சமாதானம் அடைவீர்கள். கலைத்துறையினர் கடின உழைப்பினால் திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். நினைத்த காரியங்கள் சில கைக்கூடி வரும். மாணவமணிகள் நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். விளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 20. 

சந்திராஷ்டமம்: 17, 18, 19.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். அந்தஸ்தான மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய ரகசியங்களை அறிந்து கொள்வீர்கள். உங்களின் தனித் தன்மையைப் பிறர் புரிந்து கொள்வார்கள். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரிகள் நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த பணிகளைச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பல வகைகளில் லாபம் வரும். விவசாயிகளுக்கு தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சியில் பல மாற்றங்களைக் கொண்டுவர முற்படுவீர்கள். பொருளாதாரம் ஏற்றம் பெறும். கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் சந்திப்பு நிகழும். இதனால் பல அனுகூலங்கள் உண்டாகும். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பீர்கள். 

மாணவமணிகள் நண்பர்களுடன் கவனத்துடன் பழகவும். எவரையும் நம்பி எதிலும் இறங்காதீர்கள். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும்.

பரிகாரம்: ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 17, 18. 

சந்திராஷ்டமம்: 20.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். துணிந்து நீங்கள் செய்யும் செயல்கள் வீண் போகாது. பொருளாதாரத்தில் சற்று ஏற்றமும் இறக்கமும் காணப்படும்.  

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சுமுகமாகப் பழகவும். பணவரவு சுமாராகவே இருக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த பணவரவால் கடன் தீரும். ஆனாலும் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். மகசூல் திருப்திகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகளுக்கு மனதில் சஞ்சலம் ஏற்படும். மேலிடத்தின் அதிருப்தி உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் திட்டங்களைச் செயல்படுத்தி புகழ் பெறுவீர்கள். அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்மணிகள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். தேவையற்றது என்று தெரிந்தே சில பொருள்களை வாங்கி வீணடிக்க வேண்டாம்.  மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்: ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான  தினங்கள்: 15, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதார முன்னேற்றம் நன்றாகவே இருக்கும். வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தவும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வரவுக்கேற்ற செலவுகள் செய்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள். வியாபாரிகள் தேவைக்கேற்ப பொருள்களை வாங்கி விற்பனை செய்யவும். வரவு செலவு விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. விவசாயிகள் தானியங்களால் கூடுதல் லாபம் பெறலாம். மகசூல் திருப்திகரமாக இருக்கும். கால்நடைகளால் லாபம் பெறுவீர்கள்.  

அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்து கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். 

பெண்மணிகளுக்கு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் நிலவிய பிணக்குகள் நீங்கும்.மாணவமணிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: ஸ்ரீ ஹயக்கிரீவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15, 20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com