2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி இன்று நிகழ்கிறது. குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார்.
குருபகவானின் இந்த இடப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் எவை, நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்பெறும் ராசிகள் எவை என்று தெரிந்துகொள்வோம்.
சோபகிருது வருஷம் உத்திராயணம் சிசிரருது முடிந்து வஸந்து ருது சித்திரை மாதம் 9ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 22.04.2023 சுக்லபட்சம் துவிதியை திதி, சனிக்கிழமையும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அதிகாலை 5.14 மணிக்கும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இரவு 11.26 மணிக்கும் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ச்சி ஆகிறார்.
மேஷ ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
தற்போது மாறக்கூடிய குருபகவான் எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்புப் பார்வைகளாகும்.
நன்மை பெறும் ராசிகள்: சிம்மம் - துலாம் - தனுசு - மீனம்
பரிகாரத்தின் மூலம் பயன் பெறும் ராசிகள்: ரிஷபம் - கன்னி - விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்துபெறும் ராசிகள்: மேஷம் - மிதுனம் - கடகம் - மகரம் - கும்பம்
இன்று இரவு 11.26-க்கு குருபகவான் பெயர்ச்சியாக உள்ளார். எனவே, தோஷம் பெறும் ராசிக்காரர்கள் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று குருவுக்கு வஸ்திரம் சாத்தி, முறையான பரிகாரம், குரு சாந்திக்கான அர்ச்சனை செய்துகொள்ளலாம்.
குருவிற்கு உண்டான பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
குருப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள தசா புத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது தசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையும் தரவல்லவர்.