
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் இறைவன் ஜோதி ரூபமாய் காட்சிதரும் மலையில் குவிந்துள்ளனர்.
பஞ்சபூத தலங்ளில் அக்னிஸ்தமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னிதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் இன்று மாலை சரியாக 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரலாறு காணாத கனமழை பெய்ததில் மலையில் மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின்போது ஆண்டுதோறும், மலையின் மீது 2000 பேர் ஏறி பரணி தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால சரிவு காரணமாக இந்தாண்டு மலையேறப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இருப்பினும் சிவபெருமானின் அருளைப் பெற வேண்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மலைமீது ஏறி ஜோதி ரூபமாக உள்ள இறைவனின் மகா தீபத்தைக் காண முடியாவிட்டாலும், அய்யன் இருக்கும் இடத்தை கிரிவலமாக செல்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதல் கிரிவலம் செய்து வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக் கருதி ஆயிரக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி மலைக்கு வரும் பக்தர்களுக்கு மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துள்ளது.
திருவண்ணாமலை முழுவதும் எங்கும் சிவ முழக்கம் தான்.. தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி... என்று பக்தர்கள் சிவபெருமானின் புகழைப் வாயாறவும்.. மனதாரவும் பாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.