
மதுரை: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று(ஏப். 29) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சிக் திருக்கல்யாணம், அழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரைக்கு வருகை தருவர்.
சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவானது இன்று, சுவாமி சன்னதியின் முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினார்.
பூஜைகளுக்கு பின்னர் மங்கள வாத்தியங்கள், வேதமந்திரங்கள் முழங்கிட காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
சித்திரைத் திருவிழா இன்று துவங்கியுள்ள நிலையில் அம்மனும் சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலாவும், விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 6-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 8-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதால் மதுரை மாநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.