
வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கள் கிழமை பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
ஸ்ரீ முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்ட்டாப்படும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான விசாகத் திருவிழா, கடந்த 31ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்தில் உற்சவர் சன்னதியிலிருந்து வசந்த மண்டபத்துக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்குப் பக்தர்கள் எடுத்துவந்த பாலில் சண்முகருக்குப் பாலாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். விழாவையொட்டி, மதுரை மற்றும் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா கோஷம் எழுப்பினர். மதுரை காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியிலிருந்தனர். விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தரம், மணி செல்வம் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.