
நீடாமங்கலம்: நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நவக்கிரங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம் தோறும் மாசி 5-ஆவது வியாழக்கிழமை குருபகவானுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
வியாழக்கிழமை (மார்ச்13) சங்காபிஷேகத்தையொட்டி புனிதநீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகள் சிவலிங்க வடிவில் ஹோமத்தில் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தை நடத்தி வைத்தனர்.
ஓதுவாமூர்த்திகள் தேவாரதிருமுறை பாடப்பெற்றது. அதனைத்தொடர்ந்து குருபகவானுக்கு சங்காபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், உற்சவதெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
ஜோதி ராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் ரமேஷ்சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் ஹோமத்தையும், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ,ஆராதனைகளை நடத்தி வைத்து பிரசாதங்களை வழங்கினர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நா.சுரேஷ், தக்கார் வீ.சொரிமுத்து, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.