

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிஅம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. கர்நாடக மாநில பக்தரால் வழங்கப்பட்ட புதிய தேரில் அம்மன் ஸ்ரீ சிவகாமி சுந்தரி அம்பாள் வலம் வந்தார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்கு கரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.31-ம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சன்னதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் நவ.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. வியாழக்கிழமை (நவ.13-ம் தேதி) வியாழக்கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் காலை 8 மணிக்கு, புதிய தேரில் எழுந்தருளி மகாதீபாரதனைக்கு பின்னர் கீழவீதி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்துத் தேர் இழுத்தனர்.
ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்திற்காகக் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த பக்தர்களான ராமதாஸ் பத்ரி அட்டாவர், சூர்யகிரண் அட்டாவர் ஆகியோர் பங்களிப்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சாஸ்தா கலைக்கூடத்தில் சிவகாமி அம்மனுக்காக சுமார் 21 அடி உயரத்தில் புதிய தேர் தயார் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அன்று சிதம்பரம் நகருக்குக் கொண்டு வரப்பட்டு கட்டளை தீட்சிதர் எஸ்.வி.கனகசபாபதி தீட்சிதர் மற்றும் அவரது சகோதரர்கள் முன்னிலையில் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய தேருக்கு புதன்கிழமை இரவு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு நான்கு வீதிகளில் வெள்ளோட்டம் விடப்பட்டது.குறிப்பிடத்தக்கது.
நவ-14ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் சிவகாமசுந்தரி அம்மனின் பட்டு வாங்கும் உற்சவம் நடராஜர் சன்னதியில் நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மன் சன்னதியில் பூரச்சலங்கை உற்சவமும், நவ.15-ம் தேதி சனிக்கிழமை காலை தபசு உற்சவமும், இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிக்க: தில்லி அருகே மீண்டும் வெடிச் சப்தம்; அலறிய மக்கள்! என்ன நடந்தது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.