
ராமர் பிறந்த இடமான அயோத்தியில், ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தீபோற்சவம், இந்த ஆண்டு கின்னஸ் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை சரயு நதிக்கரையில் இந்த தீபோத்சவம் நடைபெறவிருக்கிறது. இந்த நாளில், சுமார் 26 லட்சம் விளக்குகள் ஏற்று சாதனை உடைத்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன், டிரோன்கள் பறக்கவிடுவது, லேசர் விளக்குகள், கலாசார நிகழ்வுகளுடன் அயோத்தி மாநகரம் களைகட்டும்.
14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வதம் செய்துவிட்டு அயோத்தியா திரும்பும் ராமனை வரவேற்கும் வகையில், அயோத்தி மக்கள் நகரம் முழுவதையும் விளக்குகளால் அலங்கரித்ததை நினைவுகூரும் வகையில் இந்த தீபோத்சவம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்த தீபோற்சவத்தின்போது, புதிய கின்னஸ் சாதனை படைக்க அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
தேவையான பொருள்களை வாங்க ஒப்பந்தங்கள் விடப்பட்டு, அனைத்து பொருள்களும் வாங்கப்பட்டுள்ளன. விளக்கேற்றும் தன்னார்வலர்கள், அடிப்படை வசதிகள் என அனைத்தும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகல் விளக்குகள், எண்ணெய், திரி, வத்திப்பட்டி என அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. சரயு நதிக் கரைக்கு வர பல்வேறு நுழைவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 100 கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கின்றன. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், இந்த தீபோற்சவம் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இந்த தீபோற்சவத்தைப் பார்க்கும் எவர் ஒருவருக்கும், அது வாழ்நாள் அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் நதிகரையைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து விளக்குகளை ஏற்றி, நகரையே நட்சத்திரம் போல ஜொலிக்க வைப்பது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.