மக்கள் திலகம் எம்.ஜி.யாருடன் நான் பத்து படங்கள் வரையில் நடித்திருக்கிறேன். அவருடைய சுறுசுறுப்பும் பண்பும் மற்றவர்களை மதிக்கும் முறையும் யாராலும் மறக்க முடியாதது.
ஒரு நாள் படப்பிடிப்பின் இடைவேளையின் போது, வெளியில் அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
'காலையில் என்ன சாப்பிடுவீர்கள்?' என்று அவர் கேட்டார்.
'விடியற்காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் டீ சாப்பிடுவேன்' என்று சொன்னேன்.
'பல் துலக்கி விட்டுத்தானே?' என்றார்.
'இல்லை..பல் துலக்காமல் டீ சாப்பிடுவேன்' என்றேன்.
'அது தவறு..பல் துலக்காமல் ஒன்றும் சாப்பிடவே கூடாது. காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் நாம் துப்புகிற எச்சிலை கோழி சாப்பிட்டால் கோழி இறந்து விடுமென்று சொல்வார்கள். அவ்வளவு விஷத்தன்மை வாய்ந்தது. பற்களில் ஊறும் எச்சிலை முழுங்கவே கூடாது. அதோடு சுடச் சுட டீயை வேறு குடித்தால், பற்களில் உள்ளதெல்லாம் அப்படியே வயிற்றுக்குள் போனால் அவ்வளவும் கெடுதல்தான்.' என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிவுரை கூறினார்.
அன்று அவர் சொன்ன புத்திமதியை ஏற்று, மறுநாளில் இருந்து பல் துலக்கி விட்டுத்தான் டீ சாப்பிடுவேன்.
இப்போது எப்போதாவது தவறிப்போய் ஞாபக மறதியாய் காலை டீ சாப்பிட்டால் வாந்தி வந்து விடுகிறது.டீயை பார்த்தாலே அவருடைய நினைவுதான் வரும் எனக்கு.
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.03.82 இதழ்)