சிவபெருமானைப் பற்றிய வெண்பாக்களைக் கொண்ட பகுதி இது.
திருப்பெருந்துறையில் அருளப்பட்ட பாடல்கள் இவை. பதினொரு பாடல்களின் தொகுப்பு.
256
பாடலின்பம்
இருந்துஎன்னை ஆண்டான் இணையடியே சிந்தித்(து)
இருந்துஇரந்துகொள் நெஞ்சே எல்லாம், தரும்காண்
பெருந்துறையில் மேய பெரும்கருணையாளன்
மருந்துஉருவாய் என்மனத்தே வந்து.
*
இன்பம் பெருக்கி, இருள்அகற்றி எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வுஅறுத்துச் சோதியாய், அன்புஅமைத்துச்
சீர்ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக்கொண்டான் உவந்து.
பொருளின்பம்
என் நெஞ்சே,
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருங்கருணையாளன், சிவபெருமான், மருந்துவடிவமாக என் மனத்துள் வந்து குடியேறியவன், என்னை ஆள்கிறவன்,
நெஞ்சே, நீ எப்போதும் அவனுடைய இணையடியையே சிந்தித்துக்கொண்டிரு, உனக்கு வேண்டியதையெல்லாம் அவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள், அவன் மறுக்காமல் தருவான்.
*
சிறப்புநிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமான், என்னுடைய நெஞ்சத்தையே தன்னுடைய ஊராக மகிழ்ந்து ஏற்றுக்கொண்டான், எனக்குள் சோதிவடிவாக நிலைத்துநின்று இன்பத்தைப் பெருக்கினான், இருளை அகற்றினான், என்றைக்கும் என்னைத் தொடர்ந்துவருகிற பிறவிச்சுழலை அறுத்தான், அன்பை நிலைநிறுத்தினான்.
சொல்லின்பம்
இரந்துகொள்: கேட்டுப் பெற்றுக்கொள்
தரும்: தருவான்
மேய: எழுந்தருளிய
எஞ்ஞான்றும்: என்றென்றும்
தொடர்வு: தொடர்தல்
சீர் ஆர் பெருந்துறையான்: சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியவன்
சிந்தை: மனம்
உவந்து: மகிழ்ந்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.