பதச் சேதம் | சொற் பொருள் |
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி
| காதலின் பொருள் மேவின பாதகர்: காதலோடு பணத்தை நாடும் பாதகர்; விண்டு: பகைத்து; உள: உள்ளம், உள்ளத்தை; நாடியர்: ஆராய்பவர்; |
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்
| இசையிலே மோகிகள்: பாடல்களில் மோகங்கொண்டவர்கள்; |
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்தரன் ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே
| மால்: திருமால்; அயன்: பிரமன்; பரனார்: சிவன்; இமையோர்: தேவர்கள்; புரந்தரன்: இந்திரன்; |
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
| வினாவுடனே: ஆராயும் தன்மையுடனே; |
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
| கோமளி: இளமையானவள்; யாமளி: பச்சை நிறத்தவள்; நாடகம்: நடனம், கூத்து; பூரணி: நிறைந்தவள்; பஞ்சவி: பஞ்சமி எனப்படும் ஐந்தாவது அனுக்கிரக சக்தி; சூலினி: சூலத்தை ஏந்தியவள்; மாலினி: மாலையை அணிந்தவள்; |
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
| நீர்பொரும்: நீர் தங்கிய; தேசிக: குருநாதன்; |
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
| ஆலில்: ஆல இலையில்; |
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே.
| ஆடகம்: பொன்; |
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262598798&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர்</strong> ... இரண்டு வேல்களோ என்னும்படியான நீண்ட விழிகளை உடையவர்களும்; பொருளின்மீது அளவிலாத ஆசைகொண்டவர்களும்;</p><p align="justify"><strong>வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர்</strong> ... தம்மிடம் வந்தவர்களை வீணாகப் பகைத்து அவர்களுடைய உள்ளம் ‘இன்னது’ என்று ஆராய்பவர்களும்; சிலசமயங்களில் ஊமையைப் போல் இருப்பவர்களும்; விலைபேசி, சமயம் பொழுதில்லாமல் வசைமொழிகளைப் பேசுபவர்களும்;</p><p align="justify"><strong>வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்</strong> ... விலைமகளிர் எனப்படுபவர்களுமான இவர்கள் பாடலில் ஆசை கொள்பவர். இத்தகைய பெண்களின்மேல் மனம் அழிவுற்று, ஆசைகொண்டு திரிகின்ற சிறியேனான நானும்—</p><p align="justify"><strong>மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்தரன் ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே</strong> ... திருமால், பிரமன், சிவன், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானவர்களே தொழுவதற்காக பெரிய தவத்தைச் செய்யும் உன்னுடைய திருவடிகளை என்றும் மறக்காமல்;</p><p align="justify"><strong>வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ</strong> ... நல்ல வாழ்வை அளிக்கவல்ல சிவபோகத்தை விளக்குகின்ற அரிய நூல்களில் சொல்லியிருக்கும் வழிமுறையை நான் ஆராய்ந்து அறிந்து (உன் திருவடிகளைத்) தொழுது,</p><p align="justify"><strong>வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே</strong> ... வாழ்கின்ற வரத்தைத் தந்து அடியேனுடைய துன்பங்களை நீக்கியருள வேண்டும்.</p><p align="justify"><strong>நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி</strong> ... நீல நிறம் கொண்டவள்; அழகி; இளமையானவள்; பச்சை நிறத்தவள்; பல கூத்துகளை நடிக்கும் நாராயணி; பூரணமானவள்;</p><p align="justify"><strong>நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி</strong> ... சிறந்த ஐந்தாவதும் அனுக்கிரப்பதுமான சக்தியானவள்; சூலத்தை ஏந்தியவள்; மாலையை அணிந்தவள்; உமாதேவி; காளி;</p><p align="justify"><strong>நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக</strong> ... சிவபெருமான் இடபாகத்திலே விளங்கும் மாதவிக்கொடி போன்றவள்; சிவகாமசுந்தரி (என்றெல்லாம் நாமம் படைத்த) உமாதேவியார் ஈன்ற பாலனே!</p><p align="justify"><strong>நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச</strong> ... கங்கை நீர் தங்கிய சடையைத் தாங்கியுள்ள சிவபெருமான் பெற்றவனே! குருவாகிய முருகேசனே!</p><p align="justify"><strong>ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே</strong> ... ஆலிலையில் கிடந்தபடி, உலகத்தவர்கள் நிலைபெற்று வாழவும்; கிரகங்களும் நட்சத்திர மண்டலங்களும் நிலைபெற்றிருக்கவும் செய்பவனும்; இடையர் குலத்தில் பிறந்தவனும்; சிறுவாபுரியில் ‘திருவூரகப் பெருமாள்’ என்ற பெயரோடு விளங்குபவனுமான திருமாலின் மருகனே!</p><p align="justify"><strong>ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான</strong> ... பொன் பொதிந்த கோபுரம், பெரிய மதிற்சுவர், ஆலயம், பல தெருக்கள் யாவும் நிறைந்துள்ள,</p><p align="justify"><strong>தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே.</strong> ... வளம் நிறைந்த சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>நீலநிறத்தவளும்; அழகியும்; இளமையானவளும்; பச்சை நிறத்தவளும்; பலவிதமான கூத்துகளைப் பயிலும் நாராயணியும்; பூரணமாக நிறைந்தவளும்; ஐந்தாவது அனுக்கிரக சக்தியாக விளங்கும் பஞ்சமியும்; சூலத்தை ஏந்தியவளும்; மாலையை அணிந்தவளும்; உமா, காளி என்றெல்லாம் அறியப்படுபவளும்; பரமசிவனாரின் இடபாகத்தில் வீற்றிருப்பவளும்; மாதவிக் கொடியைப் போன்றவளும்; துர்க்கையும், சிவகாமசுந்தரியுமான பார்வதியம்மை பெற்ற பாலகனே! ஆலிலையில் கிடந்தபடி உலகத்திலுள்ளோர் அனைவரையும் பாதுகாப்பவனும்; கிரகங்களும் நட்சத்திர மண்டலங்களும் இயங்கச் செய்பவனும்; இடையர் குலத்தில் உதித்தவனும்; சிறுவைத் தலத்தில் ‘திருவூரகப் பெருமாள்’ என்ற பெயரோடு விளங்குபவனுமான திருமாலுக்கு மருகனே! பொன் பொதிந்த கோபுரம், பெரிய மதில், கோயில், பல வீதிகள் எல்லாமும் நிறைந்ததான சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>இரண்டு வேல்கள் எனச் சொல்லத்தக்க கண்களை உடையவர்களும்; பொருளையே விரும்பும் பாதகர்களும்; வந்தாரிடம் வீண்பகை கொண்டு அவர்கள் உள்ளம் ‘இன்ன வகையானது’ என்று ஆராய்பவர்களும்; நேரம் காலமில்லாமல் வசைச் சொற்களைப் பேசுபவர்களுமான விலைமாதர்களின்மேல் மனம் கசிந்துருகித் திரிகின்ற சிறியேனாகிய நான்,</em></p><p align="justify"><em>திருமால், பிரமா, சிவன், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானவர்களேகூட தொழுவதற்காகத் தவமிருக்கக்கூடிய உனதிரு திருவடிகளை என்றும் மறவாமலும்; நல்ல வாழ்வை அளிக்கவல்ல சிவபோதத்தை விளக்கும் நூல்கள் சொல்லியிருக்கும் வழியையே மனத்தில் விரும்பி, ஆராய்ந்து அறிந்து வாழ்வதான வரத்தைக் கொடுத்து அடியேனுடைய துன்பங்களைக் களைந்தருள வேண்டும்.</em></p><p align="justify"><img src="https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.