இது அரக்கோணத்துக்கு வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெள்ளிகரம் என்னும் தலத்துக்கான பாடல். இறைவன் திருவடியைப் பெறுவதற்கான உபாயத்தைக் கூறுகிறது. மூன்றாமடியில் இறைவனை ‘நிர்வசன ப்ரசங்க குருநாதா’ என்று விளிக்கிறது. நிர்வசன ப்ரசங்க என்றால், ‘மெளனமாக உரையாற்றுபவனே’ என்று பொருள். ‘சும்மா இரு சொல்லற’ என்று மௌனமாக இருப்பதை மௌனமாக உபதேசிக்கின்ற குருநாதனே’ என்கிறார்.
அடிக்கு ஒற்றொழித்து 27 எழுத்துகள் உள்ள பாடல்; ஒவ்வொரு அடியிலும் முதல் பாதியில் அனைத்தும் குற்றெழுத்துகள்; மடக்கிவரும் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு சீரிலும் இரண்டாமெழுத்தாக முறையே இடையின ஒற்றும், வல்லொற்றும் மெல்லொற்றும் பயில்கின்றன.
தனதன தனன தனதன தனன
தய்யன தத்த தந்த -
சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்விம லர்க்க டம்பு - சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
திவ்யக ரத்தி ணங்கு - பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி - கணவாவென்
றகிலமு முணர மொழிதரு மொழியி
னல்லது பொற்ப தங்கள் - பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
நிர்வச னப்ர சங்க - குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லிம ரத்த மர்ந்த - அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
வில்வமு டித்த நம்பர் - பெருவாழ்வே
விகசித கமல பரிமள முளரி
வெள்ளிக ரத்த மர்ந்த - பெருமாளே.