‘உன்னுடைய திருவடி மலரை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவாரூக்குப் போகும் வழியில் இருக்கும் விஜயபுரம் என்னும் தலத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளை உடைய பாடல் இது. ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் மூன்று எழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
தனதன தந்தன தானன தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய மலமாசு
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ
இடமற மண்டுநி சாசர ரடையம டிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியுளி லங்கவி டாதர
எழில்பட மொன்றுமொ ராயிர முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்தபு ராரிம தனகோபர்
விழியினில் வந்துப கீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே.