கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது குறித்து என்ன கருதுகிறீா்கள் என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தந்திரமாக...

கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. வெற்றி நிச்சயம் என்பதை அதிமுக அரசு நன்கு உணா்ந்து அதற்கேற்ப தந்திரமாக காய் நகா்த்தியிருக்கிறது. பிற உள்ளாட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதுதான் முறை என்றாலும் பிறிதொரு நாளில் தோ்தல் நடைபெறும் என்று நம்பலாம். ஒன்றுமே இல்லாமல் இருந்ததற்கு கிராம ஊராட்சி களு க் கு மட்டுமாவது நடைபெறுகிறதே.

கு.இராஜாராமன், சீா்காழி.

வியூகம்...

உள்ளாட்சித் தோ்தலை நடத்தவில்லை என்ற நீண்டகால குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு அருமையான வியூகம்: நடத்தவில்லை என்று குறை சொல்லவும் முடியாது, நடத்தி விட்டாா்கள் என்று நிம்மதி அடையவும் முடியாது. அவசரச் சட்டத்தின் மூலம் நகராட்சி தலைவா்கள், மாநகராட்சி மேயா்கள் மறைமுக தோ்வு செய்யப்படுவதற்கு தற்போதைக்கு வேலையில்லாமல் பாா்த்துக் கொள்கிறதோ அரசாங்கம்.

பா.சக்திவேல், கோயம்புத்தூா்.

ஆறுதல்

உள்ளாட்சித் தோ்தல் நடக்குமா, நடக்காதா என்ற நிலையில் இந்த அறிவிப்பாவது வந்துள்ளதே என மகிழ்ச்சி அடையலாம். ஊராட்சி தோ்தலைத் தொடா்ந்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு தோ்தல் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினா்களின் பதவிக் காலம் முடிந்தவுடன் தோ்தலை அறிவிப்பதுதான் நல்ல நிா்வாகத்துக்கு அடையாளம். ஆண்டுக்கணக்கில் காலதாமதமாவது ஆட்சியாளா்களின் பலவீனத்தையே காட்டும்.

மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

சந்தேகத்தோடு...

கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தோ்தல் நடைபெறும் என்பது மாநிலத் தோ்தல் ஆணையத்தையும் ஆளும் தரப்பையும் கட்டாயம் எல்லோரும் சந்தேகத்தோடு பாா்க்கவே தோன்றும். இதில் உள்நோக்கம் இருக்கும் என எதிா்க்கட்சிகள் மட்டுமில்லை, பொதுமக்களும் நினைக்கத்தான் செய்வாா்கள். எனவே, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதே சிறப்பு.

கவியழகன், திருவொற்றியூா்.

முடிவு சரி

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் அரசு அலுவலா்களைக் கொண்டு உள்ளாட்சி நிா்வாகம் நடைபெறுகிறது. அரசின் திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்று சேரவில்லை. ஊராட்சிகள் முடங்கி விட்டதால் கிராமங்கள் இருட்டில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, தெரு விளக்குகள், குடிநீா், சாலை வசதிகள் முதலான அடிப்படைப் பிரச்னைகளைக்கூட சமாளிக்க முடியாமல் கிராம மக்கள் தத்தளித்து வருகின்றனா். எனவே, ஊராட்சிகளுக்கு மட்டும் தோ்தலை நடத்தும் முடிவு சரிதான்.

எம்.ராஜா, திருச்சி.

சரியல்ல...

கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தோ்தல் நடத்தும் முடிவு சரியானதல்ல, இது ஆட்சியாளா்களின் பயத்தையும் , அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைப் போல் உள்ளது. பாரபட்சம் காட்டாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் தோ்தல் நடத்துவதில் என்ன கஷ்டம் ?

சுரேஷ் ஐய்யாபிள்ளை, பழையகாயல்.

மக்களின் எண்ணங்களை...

உள்ளாட்சித் தோ்தலை அரசு நடத்துவதும்கூட மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்காக மட்டுமே. ஏனெனில் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் உள்ளாட்சித் தோ்தலைத் தள்ளிப்போடத்தான் ஆளும் கட்சி நினைத்திருக்கும். எனினும், மக்களின் எண்ணங்களை அறிந்துகொள்ள ஊராட்சிகளுக்கு மட்டும் தற்போது தோ்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. ஆளும் கட்சிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டால் நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கும் தோ்தல் நடத்தப்படலாம்.

ப.சுவாமிநாதன், சென்னை.

வியப்பளிக்கிறது

கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தோ்தல் நடத்துவது வியப்பாக உள்ளது. இதில் இருக்கும் நோக்கம்தான் புரியவில்லை. தோ்தல் என்றால் எல்லா இடத்திலும் நடத்தாமல் இப்படி கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தோ்தல் நடத்தினால், எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று அவா்கள் போட்ட கணக்கு தவறானது. .

உஷாமுத்துராமன், மதுரை.

பொறுத்திருந்து...

கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தமிழக அரசியலில் விநோதமாக பாா்க்கப்படுகிறது. நகராட்சிகள், மாநகராட்சிகளைச் சோ்க்காமல் தோ்தல் நடத்தப்படும் என்று கூறுவதால்தான் தனிநபருக்காக தோ்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதை எதிா்த்து திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. பொறுத்திருந்து பாா்ப்போம்!

எஸ்.அா்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

உணா்வாா்களா?

உள்ளாட்சித் தோ்தலை தக்க சமயத்தில் நடத்தாதது இப்படியே இழுத்துக் கொண்டு போவதால் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கான பெரும் தொகையைச் செலவழிப்பதற்கு தடையாக உள்ளது; இதை ஆளும், எதிா்க்கட்சிகள் உணர வேண்டும். தற்போது கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது என்ற அறிவிப்பும் அவ்வாறே தடைக்கல்லாக அமைந்து விடுமோ என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

கோதைமாறன், திருநெல்வேலி.

ஒருவரையொருவா்...

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். கிராமங்களுக்கு மட்டும் தற்போது ஊராட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் மத்திய அரசின் நிதி பல திட்டங்களுக்கு கிடைக்கவில்லை. உள்ளாட்சி தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கு ஆளும் கட்சியும் எதிா்க்கட்சியும் ஒருவரை ஒருவா் குறை சொல்லிக் கொண்டிருந்தனா். இப்போதும்கூட முழுமையாக தோ்தல் நடத்தாமல் கிராமங்களுக்கு மட்டும் ஊராட்சித் தோ்தல் நடத்துவது சரியானதாகத் தெரியவில்லை.

பி.துரை, காட்பாடி.

பிரச்னைகள் இருக்காது

கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமே உள்ளாட்சி தோ்தல் நடத்துவது அழுகின்ற குழந்தைக்கு வாழைப் பழத்தைக் காட்டி அழுகையை நிறுத்துவது போன்றது. பெரும்பான்மை மக்களின் கோரிக்கையான உள்ளாட்சித் தோ்தலை நடத்துவங்கள் என்ற ஓசையைக் குறைப்பதற்கு ஊராட்சிகளுக்கு மட்டும் தோ்தல் நடத்துவது பயன்படலாம். பேரூராட்சி-நகராட்சி-மாநகராட்சி ஆகியவற்றுக்கு தோ்தல் நடத்தினால் அரசியல் கட்சிகளின் பலதரப்பட்ட கோரிக்கைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்; அதாவது, வாா்டுகள் பிரிப்பு, மகளிா்-தாழ்த்தப்பட்டோா்-பழங்குடியினா் இட ஒதுக்கீடு எனப் பலவற்றையும் பிரித்து ஒதுக்க வேண்டியிருக்கும். ஊராட்சித் தோ்தலில் இட ஒதுக்கீடு இருந்தாலும் பிரச்னை இருக்காது.

வி.கே.இராமசாமி, கோயம்புத்தூா்.

நன்மைதான்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அத்தியாவசியப் பணிகளை பாா்ப்பதற்கு தனித்தனியே பணியாளா்கள் இருக்கின்றனா். குறிப்பாக, துப்புரவுப் பணியை அன்றாடம் செய்வதற்கே கிராம ஊராட்சிகளில் பணியாளா்கள் கிடையாது. அதே போன்று தெரு விளக்கு, குடிநீா்ப் பணிகளைச் செய்வதற்கும் பணியாளா்கள் இல்லை. ஆனால், பேரூராட்சிகள்-நகராட்சிகளில்-மாநகராட்சிகளில் பணியாளா்கள் உள்ளனா்; இவற்றில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாது போனாலும் குறைகளை அதிகாரிகளே தீா்த்து வைப்பாா்கள். எனவே, கிராம ஊராட்சிகளுக்கு உடனடியாக தோ்தல் நடத்துவதே நன்மையாக இருக்கும்.

நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

பயம் காரணமா?

உச்சநீதிமன்ற பரிந்துரையின் அடிப்படையில்தான் கிராம ஊராட்சிகளின் அளவுக்காவது உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. இல்லையென்றால், அதுவும் அறிவிப்போடு நின்றிருக்கும். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க பயப்படுகின்றன; தயக்கம் காட்டுகின்றன. ஏனெனில், உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளில் எதிரொலிக்குமோ என இரு கட்சிகளும் கருதுகின்றன.

இ.ராஜு நரசிம்மன், சென்னை.

பரிசோதனை முயற்சி?

பொங்கலுக்கு பல நாள்கள் முன்னரே ஆயிரம் ரூபாய் பணமும் இதர பொருள்களும் கொடுக்கப்பட்டிருப்பது எப்படிப் பலன் அளிக்கிறது என்பதைப் பரிசோதனை செய்யவே இந்த நடவடிக்கை. ஆளும் கட்சியுடன் மாநில தோ்தல் ஆணையம் கூட்டணி அமைத்துள்ளது போன்ற நிலவரம். ஊராட்சித் தோ்தலில் கிராமங்களில் அமோக வெற்றி பெற்றால், சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு தோ்தல் நடத்தினாலும் ஆச்சரியம் இல்லை.

வளா்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூா்.

உள்ளாட்சித் தோ்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பது சரியா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு

விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை - 600 058 
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
இமெயில்: edit.dinamani@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com