TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 5

நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 5
Updated on
7 min read

ஏழாம் வகுப்பு:

செய்யுள் - வாழ்த்து

* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.

சொற்பொருள்:

* பண் - இசை

* வண்மை - கொடைத்தன்மை

* போற்றி - வாழத்துகிறேன்

* இருக்கை - ஆசனம்

* திரு.வி.க என்பதன் விரிவாக்கம் - திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

* திரு.வி.க வின் பெற்றோர் - விருத்தாசலனார் - சின்னம்மையார்

* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.

* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)

திரு.வி.க வின் சிறப்பு:

* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.

* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?

* மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

* பெண்ணின் பெருமை

* தமிழ்த்தென்றல்

* உரிமை வேட்கை,

* முருகன் அல்லது அழகு முதலியன.

* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?

26.08.1883 - 17.09.1953

* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?

பொதுமை வேட்டல்

* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?

போற்றி

* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?

நாடு, மதம், இனம், மொழி, நிறம்

* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?

* நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

* நூல் பயன்: இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.

* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?

நானூற்று முப்பது

* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?

இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில்

* இறைவன் உயிரில் வைத்தது எதனை?

இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.

* இறைவனின் இருக்கை யாது?

இறைவனின் இருக்கை உண்மை.

திருக்குறள்

* புரை - குற்றம்

* பயக்கும் - தரும்

* சுடும் - வருத்தும்

* அன்ன - அவை போல்வன

* எய்யாமை - வருந்தாமல்

* அகம் - உள்ளம்

* அமையும் - உண்டாகும்.

* ஆசிரியர் குறிப்பு:

* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

* சிறப்பு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்

நூல் குறிப்பு:

* மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.

* இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

* ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.

* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

* திருவள்ளுவரின் பெற்றோர் யார்?

* தாயின் பெயர் - ஆதி

* தந்தையின் பெயர் - பகவன்

* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?

மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)

* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?

வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.

* வள்ளுவன் என்றால் பொருள் யாது?

அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்

* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?

வாசுகி

* வாசுகி யாருடைய மகள்?

மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்

* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?

நெசவுத் தொழில்

* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?

நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.

* திருவள்ளுவர் காலம் எது?

கி.மு. 31

* திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.

* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?

மூன்று பிரிவுகளைக் கொண்டது.

1. அறத்துப்பால்

2. பொருட்பால்

3. இன்பத்துப்பால்

* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?

திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.

* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?

பத்து

* திருக்குறள் நூலின் பயன் யாது?

திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.

* வாய்மை என்றால் என்ன?

மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?

ஆயிரத்து முந்நூற்று முப்பது

* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?

உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.

பிரித்து எழுதுக:

* யாதெனின் - யாது + எனின்

* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்

* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:

* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.

* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.

* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.

* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.

உரைநடை: செம்மொழித் தமிழ்

* உலக மொழிகள்:

உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.

* "எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே" என்று வள்ளலார் அருள்கிறார்.

செம்மொழிகள்:

* திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.

* கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.

திருக்குறள் பற்றி டாக்டர் கிரெளல்:

* டாக்டர் கிரெளல், "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள், தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது" என்று மொழிந்து இன்புற்றார்.

தமிழின் தொன்மை:

* உலகில் பழமையான நிலபகுதியான "குமரிக்கண்டத்தில்" தமிழ் தோன்றியதாக "தண்டியலங்கார" மேற்கோள் செய்யுள் கூறுகிறது.

"ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்"

தமிழின் மேன்மை:

* தமிழ் மெல்லோசே மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.

தமிழ் மொழியின் தாய்மை:

* பெற்றோரை குறிக்கும் "அம்மை, அப்பன்" என்னும் குமரிநாட்டுத் (நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

தமிழ் மொழியின் தூய்மை:

* "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயக்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறினார் கால்டுவெல்.

தமிழ் மொழியின் செம்மை:

* மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், "செந்தமிழ்" எனப்பட்டது.

தமிழ் மொழியின் மும்மை:

* முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன.

தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"

என்பது தொல்காப்பிய நூற்பா.

* தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.

* ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.

* வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.

* தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு, பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.

தமிழ்மொழியின் இலக்கண நிறைவு:

* எல்லா மொழிகளும் "எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்" கூறிகிறது. * அதனையும் " அகம், புறம்" என இருவகையாகப் பகுத்துள்ளது.

தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:

* பண்டைத் தமிழ் இலக்கியங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன.

* "கலிப்பா" முதலான் செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:

* புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க "உவமை, உருவகம்" முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

தமிழ் மொழியின் நூல் சிறப்பு:

* ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தவற்றுள் சங்ககால நூல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவாகத் திகழ்கின்றன.

* விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நூல்களையும் கொண்டது தமிழ்மொழி.

* உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி - குமரிக்கண்டம்.

* இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் - கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம்.

* தமிழைச் செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாக எவை திகழ்கின்றன?

* தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள் ஆகும்.

* பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை.

* உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி - குமரிக்கண்டம்

* தொல்காப்பிய நூற்பா என்பது - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

துணைப்பாடம்: ஊரும் பேரும் (மலை, கரடு, பாறை, குன்று, குருச்சி, கிரி)

குறுஞ்சி நில ஊர்கள்:

* மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன.

* ஓங்கியுயர்ந்த நிலபகுதி - மலை

* மலையின் உயரத்தில் குறைந்தது - குன்று

* குன்றின் உயரத்தில் குறைந்தது - கரடு, பாறை

* குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன.

* மலையைக் குறிக்கும் வடசொல், "கிரி" என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோத்தகிரி என்பன மலையையொட்டி எழுந்த ஊர்பெயர்கள்.

* குருச்சி, ஆழ்வார்க்குருச்சி, கல்லிடைக்குருச்சி, கள்ளக்குருச்சி என்ற பெயர்கள் எல்லாம் குறிஞ்சி நிலா ஊர்களே, குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சி ஆயிற்று.

முல்லை நில ஊர்கள்: (காடு, புரம், பட்டி, பாடி)

* அத்தி(ஆர்) மரங்கள் சூழ்ந்த ஊர் "ஆர்க்காடு" எனவும், ஆல மரங்கள் நிறைந்த ஊர் "ஆலங்காடு" எனவும், களாச்செடிகள் நிறைந்த ஊர் "களாக்காடு" எனவும் பெயரிட்டனர்.

* காட்டின் நடுவில் வாழ்ந்த மக்கள், அங்குத் திரியும் விலங்குகளால் தமக்கும், தம் கால்நடைகளுக்கும் ஊறு நேராவண்ணம் வேலி கட்டிப் பாதுகாத்தனர். அவ்வூர்கள் "பட்டி, பாடி" என அழைக்கப்பட்டன. (காளிப்பட்டி, கோவில்பட்டி, சிறுகூடல்பட்டி)

மருத நில ஊர்கள்: (ஊர், குடி, சோலை, பட்டி, குளம், ஏரி, ஊரணி)

* நிலவளம், நீர்வளமும் பயிர்வளமும் செறிந்த மருதநிலக் குடியிருப்பும் "ஊர்" என வழங்கப்பட்டது.

* ஆறுகள் பாய்ந்த இடங்களில் ஆற்றூர் என வழங்கப்பட்ட பெயர்கள் காலபோக்கில் "ஆத்தூர்" என மருவியது.

* மரங்கள் சூழ்ந்த பகுதிகளில் மரங்களின் பெயரோடு ஊர் பெயரை சேர்த்து வழங்கினர். (கடம்பூர், கடம்பத்தூர், புளியங்குடி, புளியஞ்சோலை, புளியம்பட்டி).

குளம், ஏரி, ஊருணி ஆகியற்றுடன் ஊர் பெயர்களில் இணைத்து வழங்கினர். (புளியங்குளம், வேப்பேரி, பேராவூரணி)

நெய்தல் நில ஊர்கள்: (பட்டினம், பாக்கம், கரை, குப்பம்)

* கடற்கரை பேரூர்கள் "பட்டினம்" எனவும், சிற்றூர்கள் "பாக்கம்" எனவும் பெயர் பெற்றிருந்தன.

* பரதவர் வாழ்ந்த ஊர்கள் "கீழக்கரை, கோடியக்கரை, நீலாங்கரை" எனப் பெயர் ரெற்றிருந்தன.

* மீனவர்கள் வாழும் இடங்கள் "குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.

திசையும் ஊர்கள்: (ஊர், பழஞ்சி)

* நாற்றிசைப் பெயர்களும் ஊர்களுடன் குறிக்கப்பெற்றன. ஊருக்கு கிழக்கே இருந்த பகுதியை "கீழுர்" எனவும், மேற்கே இருந்த பகுதியை "மேலூர்" எனவும் பெயரிட்டனர்.

நாயக்க மன்னர்கள்:

* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தனர்.

* அவர்கள் ஊர்ப்பெயருடன் பாளையத்தை சேர்த்து வழங்கினர். (ஆரப்பாளையம், மதிகோன்பாளையம், குமாரப்பாளையம், மேட்டுப்பாளையம்)

ஊர் பெயர்கள் மாறுதல்:

* கல்வெட்டுகளில் காணப்படும் "மதிரை" மருதையாகி இன்று "மதுரை"யாக மாறியுள்ளது.

* கோவன்புத்தூர் என்னும் பெயர் "கோயமுத்தூர்" ஆகி, இன்று "கோவை" ஆக மருவியுள்ளது.

இலக்கணம்: சார்பெழுத்துகளின் வகைகள்

* நம் தமிழ்மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மைபெற்று விளங்குவதால் அவற்றை முதலெழுத்துகள் என்கிறோம்.

* முதலெழுத்துகளைச் சார்ந்துவரும் எழுத்துக்களைச் சார்பெழுத்துக்கள் என்கிறோம்.

* சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும். அவை: உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்.

புறநானூறு

நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால் யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே;

- மோசிகீரனார்

சொற்பொருள்:

* அறிகை - அறிதல் வேண்டும்

* தானை - படை

* கடனே - கடமை

ஆசிரியர் குறிப்பு:

* மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள "மோசி" என்னும் ஊரில் வாழ்ந்தவர்.

* "கீரன்" என்னும் குடிப்பெயரை உடையவர்.

* உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, "சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை" என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.

* இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

நூல்குறிப்பு:

* புறம் + நான்கு + நூறு = புறநானூறு.

* இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

* இது புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.

* புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.

* நூல் பயன்: புறநானூற்றைக் கற்பதனால், தமிழர்தம் பழங்காலப் புறவாழ்க்கையையும் பண்பாட்டையும் அறிந்து பெருமிதம் கொள்ளலாம்.

* அரசனைக் குறிக்கும் வேறு பெயர்கள்: கோ, மன்னன், வேந்தன்.

முதுமொழிக்காஞ்சி

* ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்

* காதல் - அன்பு, விருப்பம்

* மேதை - அறிவு நுட்பம்

* வண்மை - ஈகை, கொடை

* பிணி - நோய்

* மெய் - உடம்பு

ஆசிரியர் குறிப்பு:

* பெயர்: மதுரை கூடலூர் கிழார்

* பிறந்த ஊர்: கூடலூர்

* சிறப்பு: இவர் தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோள்களாக கையாண்டுள்ளார்கள்.

* காலம்: சங்க காலத்திற்குப்பின் வாழ்ந்தவர்.

நூல் குறிப்பு:

* முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளுள் ஒன்று.

* இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

* இந்நூலை "அறவுரைக்கோவை" எனவும் கூறுவர்.

* இந்நூலில் பத்து அதிகாரங்களும், அதிகாரத்திற்கு பத்துச் செய்யுள் வீதம் நூறு பாடல்களுள் உள்ளன.

உரைநடை: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்

உ.வே.சா:

* யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தவர் உ.வே.சா. அவரே அனைவராலும் "தமிழ்த்தாத்தா" என்று அழைக்கப்படுபவர்.

* உ.வே.சா.வின் ஆசிரியரே "மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்".

இளமையும் கல்வியும்:

* மீனாட்சிசுந்தரனார் 1815 ஆண் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் திருச்சி மாவட்டம் "எண்ணெய்க்கிராமத்தில்" பிறந்தார்.

* பெற்றோர்: சிதம்பரம் - அன்னத்தாச்சியார்.

* தமது தந்தையிடமே கல்வி கற்றார்.

கல்வியே வாழ்க்கை:

* மீனாட்சிசுந்தரனார் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் "திரிசிரபுரத்தில்" (திருச்சி) வாழ்ந்தார்.

* அவரை "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார்" என்றே அழைப்பர்.

* அவரிடம் "கல்வி கற்க வேண்டும்" என்ற வேட்கை தணியாததாக இருந்தது.

* "கல்வியே வாழ்க்கை" என்று இருந்தவர்.

தமிழ் கற்பித்தல்:

* மீனாட்சிசுந்தரனார் சாதி, சமயம் பாராது அனைவருக்கும் கல்வி கற்பித்தார்.

* குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத்தவர்கள்.

* இவர் சில காலம் திருவாவடுதுறையில் ஆதின வித்துவானாக பணியாற்றினார்.

* திருவாவடுதுறையில் வாழ்ந்த காலத்தில் தான் உ.வே.சாமிநாதருக்கு ஆசிரியராக இருந்தார்.

தமிழ்தொண்டு:

* இவர் 80க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

* கோவில்களை பற்றிய "தலபுராணங்கள்" பல இயற்றியுள்ளார்.

பண்பு நலன்கள்:

* மீனாட்சிசுந்தரனார் அருங்குணமும் நிறைந்த புலமையும் தளராத நாவன்மையும் படைத்தவர்.

* நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

* ஒருமுறை அவரது நண்பர் ஆறுமுகம் என்பவர், தம்முடைய குடும்பத் தொடர்பாக கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரம் ஒன்று எழுதிக்கொடுத்தார்.

* அதில், சாட்சிக் கையொப்பமிட்ட  வந்த ஒருவருடைய இருப்பிடம் கும்பகோணத்தில் உள்ள சுண்ணாம்புக்காரன் தெரு என்பது. அதனை " நீற்றுக்காரத் தெரு" எனவும் வழங்குவர். இந்த இரண்டில் எதனைப் பெயருக்கு முன்னால் சேர்க்கலாம் என்று அவர் கேட்டபோது, மீனாட்சிசுந்தரனார் "இரண்டும் வேண்டாம், மூன்றாவது தெரு" என்று போட்டுவிடும் என்று சொன்னார். அதிலுள்ள நகைச்சுவை உணர்வை அனைவரும் அறிந்து மகிழ்ந்தனர். மூன்றாவது என்பது சுண்ணாம்பைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். (வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு)

நோய்க்கு மருந்து இலக்கியம்:

* தனக்கு உடல்நிலை சரி்யில்லாத போது சற்று ஓய்வெடுத்தல் நல்லதென்று மற்றவர் கூற, நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறினார்.

* மறைவு: 01.02.1876 அன்று உலகவாழ்வை நீத்தார்.

           நாளை தொடரும்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com