எரிகொள் செந்நாயிறு இரண்டு உடனே உதயமலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள், மீண்டுஅவற்றுள்
எரிகொள் செந்தீவீழ் அசுரரைப்போல எம்போலியர்க்கும்
விரிவ; சொல்லீர், இதுவோ வையம் முற்றும் விளரியதே?
(காதலி சொல்வது)
எரிகின்ற இரண்டு சூரியர்கள் ஒரே நேரத்தில் உதயமலையில் தோன்றினால் எப்படி இருக்கும்! அப்படிப்பட்ட தன்மையைக் கொண்டவை எம்பெருமானின் கண்கள்.
அந்தக் கண்களில் தோன்றும் சிவந்த நெருப்பில், அசுரர்கள் திரும்பத் திரும்ப விழுந்து அழிகிறார்கள், அது இயல்புதான்.
ஆனால், அதே கண்கள் எங்களைப்போன்ற பெண்களையும் (காதலாகிய) நெருப்பில் வீழ்த்துகின்றனவே, இது சரியா? இதுதான் இவர் உலகம் முழுவதையும் காப்பாற்றும் முறையா? சொல்லுங்கள்!