வெற்றி வேண்டுமெனில் - பாலகுமாரன்; பக்.152; ரூ. 80;
விசா பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044 - 2434 2899.
நூலாசிரியர் பாலகுமாரன் 21 தலைப்புகளில் மனதின் பல்வேறு பரிமாணங்களை வெகு இலகுவாக தனக்கேயுரிய நடையில் படைத்திருக்கிறார். அத்தனையும் ரசித்து, சுவைத்து, நம்மை அசைபோட வைக்கிறது.
வெற்றிக்கு என்ன வழி என்பதை பல்வேறு எழுத்தாளர்கள் படைத்திருந்தாலும் இதுபோன்ற மென்மையான மனதை வருடவைத்து, செயலில் இறங்க வைப்பது போன்ற எழுத்துக்கள் அபூர்வம். அமைதிதான் ஒருவனுக்கு அற்புத சொத்து. அமைதியற்ற மனிதர்களால்தான் உலகில் வன்முறை நடக்கிறது. எனவே, அமைதிதான் இனிமை தரும் என்பது ஏற்கக்கூடிய ஒன்று.
சோம்பல் பழக்கமானால் தோல்வி பழக்கமாகும் என்பதும், கர்வம் என்பது பலவீனம், கோபம் நண்பர்களைத் துண்டிக்கிறது. எதிரிகளை உற்பத்தி செய்கிறது.
இவ்வாறான பல்வேறு கோணங்கள், பார்வைகளில் மனதில் எழும் அலைகளை ஆழ்ந்து ஆராய வைத்திருக்கிறார்.
மனிதர்களை வெகு எளிதாக ஊனமாக்குகிற விவகாரம் பொறாமைதான்.
இப்படிப்பட்ட விஷயங்களால் வெற்றியை அடையமுடியாது. அதற்கு நீங்கள் பல்வேறு நெறிகளைக் கையாள வேண்டும். பலவீனத்தை அறிந்து, விவேகத்துடன் செயல்பட்டால் வெற்றி கொள்வது எளிது என்பன போன்ற நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை வைத்தே அதற்குத் தீர்வும் காண்கிறார் ஆசிரியர். சிறப்பான நூல்.