கொங்கு வேளாளர் குல வரலாறு - முதல் பாகம், புலவர் செ. ராசு; பக்.330; ரூ.350; கொங்கு ஆய்வு மையம், ஈரோடு - 638011; )0424-2262664.
தமிழகத்தின் ஐந்து பகுதிகளுள் ஒன்றான கொங்கு நாட்டில் உழவைத் தொழிலாகக் கொண்ட வேளாண் மக்கள் கொங்கு வேளாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பிற வேளாளர் சமூகத்தினரிடமிருந்து தனி அடையாளமாகக் "கொங்கு' என்ற அடைமொழி சேர்த்து அழைக்கின்றனர். அந்த மக்களின் உட்பிரிவான குலங்கள் குறித்த வரலாற்றைக் கூறும் நூல் இது.
கூட்டம் கூட்டமாகக் குடியேறிய காரணத்தாலும், பண்டைக் கால சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டமாக வாழ்ந்ததாலும் தங்களுக்கான அடையாளப் பெயரைக் "கூட்டம்' என்று அழைத்தனர். இது பெரும்பாலும் பேச்சு வழக்கில் இருந்தாலும் ஆய்வாளர்கள் குலம் என்று கூறுகின்றனர்.
கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, காணிப் பாடல்கள், பழந்தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் தக்க சான்றுகள் மூலம் 57 கொங்கு வேளாளர் குலங்களின் வரலாற்றை இந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
ஒவ்வொரு குலத்தின் பெயர்க்காரணம், அந்தக் குலத்துக்குச் சேர்ந்த காணியூர்கள், அக் குலத்தில் பிறந்த வரலாற்று நாயகர்கள், அது குறித்த இலக்கிய, கல்வெட்டு, செப்பேடு பாடல் சான்றுகள் என்று விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.