மண் கசந்தால் மானுடமே அழியும் - பி.தயாளன்; பக்.100; ரூ.60; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14; )044 - 2848 2441.
சுற்றுச்சூழலை சீரழித்தால் மனித வாழ்க்கை சீரழிந்துவிடும் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். நீர், காற்று ஆகியவை கெட்டால் மனிதனுக்கு என்ன பிரச்னைகள் வரும்? திடக் கழிவு மாசுகளால் நமக்கு நேரும் தீங்குகள் எவை? பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் எவ்வாறு கெட்டுப் போகிறது? புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள் எவை? அதிக ஓலியால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள், அதிக நேரம் செல்போனில் பேசினால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை பற்றியெல்லாம் மிக எளிமையாக இந்நூல் விளக்குகிறது. மின்னணுப் பொருட்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்ட நிலையில், மின்னணுப் பொருட்களின் கழிவுகளால் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்புகளைப் படிக்கும்போது மனம் கலக்கமடைகிறது. ""அணு உலைகள் பாதுகாப்பானவையே. ஆனால் பூகம்பம், சுனாமி தாக்குதல் முதலிய இயற்கை இடர்பாடுகளைத் தாங்கும் அளவுக்குப் பாதுகாப்பானவையாக உள்ளனவா?'' என்று நூலாசிரியர் கேள்வி எழுப்புவது சிந்திக்க வைக்கிறது. சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் மனித குலம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மனிதகுலம் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் நூல்.