இலக்கியச் சுவடுகள் -ஆ. மாதவன்; பக்.376; ரூ.250 ; ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-11; )044 - 2558 2552.
பல்வேறு காலகட்டங்களில் ஆ. மாதவன் எழுதிய, பல நிகழ்வுகளில் வாசித்த 40 இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நாற்பதாண்டு கால தமிழ் இலக்கியச் சூழலின் தடத்தைக் காட்டுகிறது.
"எண்பதுகளின் தமிழ் நாவல்கள் நான்கு' கட்டுரை மிக நேர்த்தி. ஆண்டுதோறும் இத்தகைய மதிப்பீடுகளை அவர் செய்திருக்கலாகாதா? என கேட்கத் தோன்றுகிறது.
"பஷீரின் படைப்புலகம்' கட்டுரை மிக நீண்டது (30 பக்கங்கள்) என்றாலும், ஒரு தமிழ் வாசகனுக்கு வைக்கம் முகமது பஷீரின் படைப்பாற்றலை முழுமையாக விரிக்கிறது. எழுத்தால் ஒரு ஆவணப்படம்!
"தமிழ் எழுத்தாளர்கள் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு உண்மைகளை ஊமையாக்குகிறார்கள்' (தலைப்பு இது) என்ற பேட்டியில் (2005) ஒரு கேள்வி பதில் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.
கேள்வி: தமிழில் வந்துகொண்டிருக்கும் சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்: போலியான வலிமை கொண்ட கதாநாயகர்களையும் அரைகுறை ஆடை அணிந்த பெண்களையும் உலவவிடும் (தமிழ்ச்) சினிமா போலவே இன்றைய பெரிய பத்திரிகைகள் வலம் வருகின்றன. சிறுபத்திரிகைகளும்கூட, இந்த சினிமா தாக்கத்தாலோ என்னமோ, ஆளுக்கொரு கோஷ்டியாக சிதறிக் கிடக்கின்றன. இதில் நல்லதைத் தேடிப்போக நல்ல வாசகனுக்கு நேரமில்லை. ஆகவே, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் முன்னால் தவம் கிடக்கிறான். இது இன்றைய அவலம்.