புதியவானம் புதிய பூமி - பட்டுக்கோட்டை ராஜா; பக்.368; ரூ.333; சிக்ஸ்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை- 17; ) 044 2434 2771.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் இரண்டாம் சரபோஜியை மையமாக வைத்து படைக்கப்பட்ட இந்த நாவலில் வரலாறு திரியாமல் சம்பவங்கள் கோக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
நாவல் என்றாலே காதல், வீரம், எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திருப்பங்கள் இருக்கும். இந்நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல. நாவலைப் படிப்பவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை விளக்கியவர், அதன் பின் நாவலை வித்தியாசமாக நகர்த்திச் சென்றிருப்பது புதுமையான முயற்சி.
சரபோஜி என்கிற மையப்புள்ளியைச் சுற்றி முத்தம்மாள், ஸ்வார்ட்ஸ் பாதிரியார், வேதநாயகம், சின்னண்ணா, அமரசிம்மன், வீரசேனன் என பல கதை மாந்தர்களை உலவவிட்டு, நாவலை விறுவிறுப்பாக நகர்த்திச்செல்ல முயன்றிருக்கிறார்.
வணிகத்தோடு நின்ற ஆங்கிலேயரை ஆட்சிபரிபாலனத்துக்கு அழைத்து வந்தவர்கள் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்தாம் என்பது பொதுவான புகாராக இருந்த நிலையில், அந்தச்சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை நாவல் வாயிலாக வாசகர் ஏற்கும் வகையில் யதார்த்தத்துடன் உணர்த்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தாலும் சரபோஜி மன்னர் தம்மை நம்பிய தமிழ் மக்களுக்கும், அவர்களது பாரம்பரியத்துக்கும் எப்படி விசுவாசமிக்கவராக இருந்திருக்கிறார் என்பதற்கு ஆங்கிலேய அதிகாரி மெக்லாட் உடனான போராட்டமும், மல்யுத்த வீரனுடனான மோதலும் எடுத்துக்காட்டப்படுகின்றன. படித்து ரசிக்க வேண்டிய நாவல்.