நான் கண்ட போராளிகள் - களமும் வாழ்வும்
By DIN | Published On : 08th February 2021 10:24 AM | Last Updated : 08th February 2021 10:24 AM | அ+அ அ- |

நான் கண்ட போராளிகள் - களமும் வாழ்வும்- ஓவியர் புகழேந்தி; பக்.456; ரூ.480; தோழமை வெளியீடு, எஸ்பி.45, 3 ஆவது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை-78.
"தமிழீழம் நான் கண்டதும் - என்னைக் கண்டதும்'
"தலைவர் பிரபாகரன் - பன்முக ஆளுமை' என்ற இரு நூல்களுக்குப் பிறகு ஓவியர் புகழேந்தியின் மூன்றாவது நூல் இது.
விடுதலைப் புலிகளின் வசம் தமிழீழம் இருந்த காலத்தில் இரு தடவைகள் பயணம் மேற்கொண்டவர் ஓவியர் புகழேந்தி. அவரின் இரண்டாவது பயணத்தில் 40 நாள்கள் அங்கு தங்கியிருக்கிறார். இந்த தடவை மனைவி குழந்தைகளுடன் சென்றதால், தான் சந்தித்த ஆளுமைகள் பற்றிய இதர குணநலன்களை - திறமைகளை அவர்களது விசாலமான அறிவையும் நமக்கு காட்டுகிறார்.
இரண்டாவது பயணத்தில் ஓவியக் கண்காட்சி, ஓவிய வகுப்பெடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தமிழீழத்தின் முழுப் பகுதிக்கும் சென்று உரையாற்றியதையும் பதிவு செய்துள்ளார்.
பிரபாகரன் என்ற விருட்சத்தின் வேர்களாக விழுதுகளாக இருந்த பலரில் 33 பேரின் வாழ்க்கையை இந்நூலில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக அரசியல் விவகாரப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், நிதிப்பொறுப்பை வகித்த தமிழேந்தி, தமிழீழ உள்நாட்டு விவகாரங்களைக் கவனித்த " ஈராஸ்' தலைவராக இருந்து புலிகள் அமைப்புடன் இணைத்துக் கொண்ட கே.ஏ. பாலகுமாரன், கல்வி இலாகாவைக் கவனித்த பேபி சுப்ரமணியம், போரில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்காக உருவான "செஞ்சோலை' காப்பகத்தின் பொறுப்பாளரான தாய் ஜனனி, ஊடகத்துறை இசைப்பிரியா, கடற்புலி தளபதி சூசை, பயிற்சியாளர் மாஸ்டர் வீரப்பன், வரலாற்றுப் பிரிவு பொறுப்பாளர் யோகி என்கிற யோகரத்தினம், கரும்புலி பார்த்திபன் உள்ளிட்டவர்களும் இந்த பதிவுகளில் அடங்குவர்.
இவர்கள் மட்டுமல்லாது இவர்களது குடும்பத்தினருடனும் நட்பு பாராட்டி, கலந்து பேசிய நினைவுகளைப் பதிவு செய்திருப்பதைப் படிக்கையில் - நெஞ்சம் கனக்கிறது. "இவர்களில் பலர் இன்றில்லை; தான் வரித்துக் கொண்ட லட்சியத்துக்காக போரிட்டு உயிரிழந்திருக்கிறார்கள் மற்றும் சிலர் இறுதி கட்டப்போரில் உலகை நம்பி, சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப் பட்டிருக்கிறார்கள்'' என்கிறார் புகழேந்தி.