பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு
Updated on
1 min read

பாண்டியர் வரலாறு - டி.வி. சதாசிவப் பண்டாரத்தார்;  பக். 176; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம்,  சென்னை- 104. 

ஆய்வறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் தமிழுக்கு அளித்த நூற்கொடைகளில் ஒன்று பாண்டியர் வரலாறு.

பாண்டியர்களின் தொன்மையை நிறுவுவதுடன் கடைச் சங்க காலத்துக்குப் பின்னர் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்றைச் சுருக்கமாகவும் ஆய்வு வழிப்பட்டும் தெரிவிக்கிறது.

பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் கபாடபுரமும் அழிந்ததால் வெளியேறி மதுரையில் அரசு அமைத்துக் கடைச் சங்கத்தை நிறுவிய பாண்டியன் முடத்திருமாறன் சிறப்பாக அறிமுகப்படுத்தப்படுகிறார். கடைச் சங்க காலப் பாண்டிய மன்னர்களைக் குறிப்பிடும்போது, அவர்கள் தொடர்புடைய சங்கப் பாடல்களையும் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

களப்பிரர்கள் எழுச்சியால் கடைச்சங்கமும் அழிந்துபட்டது பற்றித் தெரிவிப்பதுடன், வேள்விக்குடிச் செப்பேடுகளை மேற்கோள் காட்டிப்  பாண்டியன் கடுங்கோன் மீண்டும்  பாண்டியர் அரசு அமைத்தது பற்றியும் விவரிக்கப்படுகிறது.

வரலாற்றில் இத்தனை பாண்டிய மன்னர்களா என்று வியக்கும் வகையில் கல்வெட்டு, செப்பேட்டுத் தகவல்களுடன் பாண்டிய மன்னர்கள் அனைவரையும் பட்டியலிட்டு, அவர்களின் படைச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் குறிப்பிடுவதுடன் தூய தமிழ்ப் பெயர்களையும் பட்டங்களையும் கொண்டவர்களாக அவர்கள் திகழ்ந்ததையும் கூறுகிறார்  ஆசிரியர்.

சோழன் தலைகொண்ட கோ வீரபாண்டியன் வரலாற்றுடன்,  பின்னர்,  ஆதித்த கரிகாலனால் அவன் கொல்லப்பட்டது பல கல்வெட்டுகளில் இடம்பெற்றிருப்பதையும் பண்டாரத்தார் விளக்குகிறார். தவிர, பிற்காலத்தில் சோழர்களை வென்றொழித்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.

பிற்சேர்க்கையாக பாண்டிய மன்னர்களின் செப்பேடுகள்,  மெய்க்கீர்த்திகள், மானூர்க் கல்வெட்டுச் செய்திகளும் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com