பத்மஸ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி  நாட்டுப்புறவியல் நோக்கு

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி  நாட்டுப்புறவியல் நோக்கு

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பியின் ஒரு கிராமத்து நதி  நாட்டுப்புறவியல் நோக்கு - பெ. சுப்பிரமணியன்; பக். 180, ரூ.200;  காவ்யா வெளியீடு,  சென்னை- 24; 044 23726882.

கவிஞர் சிற்பியின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் "ஒரு கிராமத்து நதி' கவிதை தொகுப்பை ஆய்வு செய்கிறது இந்நூல். கொங்கு மண்ணின் நாட்டுப்புற 
மரபுகளை கவிஞர் சிற்பி எவ்விதம் எடுத்தாளுகிறார் என்பது அலசி ஆராயப்பட்டு இருக்கிறது. ஊர் புறம், அதனூடே பாய்ந்து ஓடும் ஆறு,  அதன் ஈரத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு வாழும் மாந்தர்கள், அவர்களது வாழ்வியல், பண்பாட்டுக் கூறுகள் என பல்வேறு அம்சங்களை எப்படி கவிஞர் காட்சிப்படுத்தி இருக்கிறார் என்பதை நூலாசிரியர் வரிக்கு வரி மேற்கோள் காட்டி விளக்கி இருக்கிறார்.

பொதுவாகவே ஒரு பகுதியில் உள்ள வட்டார வழக்கு மொழி, மாற்றுப் பகுதி மக்களுக்கு எளிதில் வசப்படாது. அப்படியாக கொங்கு நாட்டு மண்ணின் மொழியை கவிதை எங்கும் எடுத்து கவிஞர் சிற்பி கையாளும்போது அதற்கான உரையாக இந்த புத்தகத்தை கருதிக் கொள்ளலாம். 

புதுக்கவிதையுடன் வாய்மொழி மரபை கலந்து எப்பேற்பட்ட கவிதைகளை சிற்பி சமைத்திருக்கிறார் என்பது விளக்கிக் கூறப்பட்டுள்ளது. அதன் வாயிலாக கொங்கு மக்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், சடங்குகள், மாண்புகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. மழைப்பாட்டு, கும்மிப்பாட்டு, தாலாட்டு என பாமர மக்களின் வாழ்வோடு பாடல்கள் இரண்டறக் கலந்து இருக்கிற உண்மையும் உணர்த்துகிறார் நூலாசிரியர்.

வாசகர்களுக்கு புதிய அகக்கதவை திறந்து விடுகிறது இந்த நூல். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com