தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள் - எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் (தமிழில்: ஸ்ரீதர் திருச்செந்துறை, எஸ்.கிருஷ்ணன், வி.வி.பாலா); பக். 256; ரூ. 300; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14 : ✆ 044-4200 9603.
வட இந்தியாவை சுமார் 600 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட இஸ்லாமிய ஆட்சியாளர்களின் பாதிப்பு தென்னிந்தியாவில் குறைவே. எனினும், மதுரை, ஸ்ரீரங்கம் வரை இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. மதுரையிலும் ஆற்காட்டிலும் சிறிதுகாலம் சுல்தான்கள், நவாப்களின் ஆட்சி நிலவியது. அவர்களின் ஆதிக்கத்தை விஜயநகரப் பேரரசும், மராட்டிய அரசும், பின்னாளில் அமைந்த ஆங்கிலேய அரசும் ஓரளவு குறைத்தன.
நூறாண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலை. தொல்லியல் துறை தலைவராகப் பணியாற்றிய எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் எழுதிய இந்நூல் கொடூரமான பக்கங்களை பாரபட்சமின்றிப் பதிவு செய்கிறது.
சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டியப் பேரரசும் வலுவிழந்து, திக்குத் தெரியாமல் தத்தளித்த தமிழகம் அந்நியப் படையெடுப்புகளைத் தாங்கி நின்றது ஒரு வியப்பூட்டும் வரலாறு. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நடத்திய அதிதீவிரத் தாக்குதலை மன்னர்களோ, மக்களோ அதுவரை கண்டதில்லை. அத்தாக்குதலின் தன்மை, அதனால் தென்னிந்தியாவில் நேரிட்ட அரசியல், பண்பாட்டு மாற்றங்களைத் தகுந்த ஆதாரங்களுடன் இந்த நூல் பதிவு செய்கிறது.
13-ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியா, தக்காணத்தில் முகமதியர்களின் படையெடுப்பு, கில்ஜிக்களின் ஆட்சியில் நிகழ்ந்த படையெடுப்புகள், துக்ளக் படையெடுப்புகள், தென்னிந்திய இஸ்லாமிய அரசுகள் ஆகிய தலைப்புகளில் இந்த ஆய்வுத் தொகுப்பு அமைந்திருக்கிறது. இஸ்லாமியப் பயணி இபின் பதூதாவின் குறிப்புகள், கோயில் கல்வெட்டு சாசனங்கள் போன்றவை சிறப்புச் சேர்க்கின்றன. வரலாற்றை உள்ளது உள்ளபடியே புரிய உதவும் முக்கிய நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.