ஆகோள்-கபிலன் வைரமுத்து; பக். 184; ரூ. 220; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை- 78; ✆ 044 - 4855 7525.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுமையான ஒரு குடிமை எண் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் நித்திலன், அவனுடைய மேலதிகாரிகள், நித்திலனின் தோழியான செங்காந்தள் ஆகியோரைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது இக்கதை.
கடந்த காலத்தை நோக்கிப் பயணிக்கும் ரயிலில் 120 கோடி மக்களுடைய பயோமெட்ரிக்ஸ் தகவல்களைக் கொண்டு செல்கின்றனர் நித்திலன் குழுவினர். 2032-இல் பயணத்தைத் தொடங்கி 1935-இல் முடிக்கத் திட்டமிடுகின்றனர். ஆனால், ரயிலில் ஏற்பட்டுவிட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் மேலும் பல ஆண்டுகளைக் கடந்து 1920-க்குப் போய்விடுகிறது. அவர்கள் வந்து இறங்கும் இடம் உசிலம்பட்டி.
அந்த ஊர் மக்களோடு அவர்கள் பழகுவது, அங்கு அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், குற்றப்பரம்பரை சட்டத்துக்கு ஆட்சியாளர்கள் திட்டமிடுவது அதனை ஊர் மக்கள் எதிர்ப்பது, ஊர் மக்களின் நம்பிக்கைகள், ஏக்கங்கள், கொண்டாட்டங்கள், துயரங்கள் என அனைத்தையும் அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
கிராமவாசிகளான, சின்னமாயன், ஆங்குத்தேவன், மண்டையன், விருமாயக்கா, கொட்டாவி, சீனித்தேவன், வெள்ளையத் தேவர், கந்தன் எல்லாருமே அற்புதமான வார்ப்புகள். குறிப்பாக போதும்பொண்ணு ஒரு துயரக்கவிதை.
புதினத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள ஆனச்சாத்தன் நிகழ்வு கதைக்கு உதவவில்லை. நித்திலனின் அலுவலகத் தொடர்பு முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
முற்றிலும் மாறுபட்ட இரு வெவ்வேறு உலகங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருப்பதற்காக நூலாசிரியரைப் பாராட்டலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.