இதழியல் - பேரா. இரா. கோதண்டபாணி; பக்.264, ரூ. 250; செல்லப்பா பதிப்பகம், மதுரை - 625 001; ✆ 99421 76893.
செய்தித்தாளில் உலகம் முழுவதையும் காண்கிறோம் எனத் தொடங்கும் நூலாசிரியர், அதன் வரலாறு, அமைப்பு, உருவாகும் விதம் என பல்வேறு கோணங்களில் விளக்கியுள்ளார்.
முதல் இரு பகுதிகளில் இந்திய இதழியலின் வரலாறு, சுதந்திர போராட்டக் காலத்தில் இதழ்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்தும், இந்தியாவின் ஒவ்வொரு மொழியிலும் தோன்றிய இதழ்கள் தொடர்பான தகவல்களையும் பருந்து பார்வையில் கூறியுள்ளார்.
தொடர்ந்து, ஒரு செய்தித்தாள் உருவாகும் முறை, அதன் பின்னர் செயல்படும் செய்தியாளர், ஆசிரியர் குழுவின் பணிகள், இதழில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றி வாசகர்களுக்கு எளிய நடையில் விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு தகவலுக்கு கீழும் அது எடுக்கப்பட்ட மூலநூலின் பெயரை குறிப்பிட்டுள்ளது வாசகர்களை இதழியல் குறித்து மேலும் தேட வைக்கிறது. பல அறிஞர்களின் கருத்துக்களை பதிவு செய்தது மூலம் மற்ற இதழியல் நூல்களில் இது தனித்த அடையாளத்தை பெறுகிறது.
பத்திரிகைச் சுதந்திரம் நாட்டுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதும், அதை ஒரு வரம்புக்குள் வைத்திருப்பதன் மூலம் நாடு எவ்வாறு சிறந்து விளங்கும் என்பது குறித்தும் பல உதாரணங்களின் துணையுடன் விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு.
நூலில் பல்வேறு தரவுகள் பழமையனவாக உள்ளதால் தற்கால இதழியல் குறித்து அறிய விரும்பும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோருக்கும், அத்துறை சார்ந்த படிப்புகளை மேற்கொண்டு வரும் இளைய தலைமுறையினருக்கும் இந்நூல் மிகவும் உறுதுணையாக இருக்கும்.