படியேற்றம் நாவல் - மலையாளத்தில் ஆர்.நந்தகுமார் (தமிழில்- எஸ்.மோகன்குமார்); பக்.290; ரூ.320; காவ்யா, சென்னை-77; ✆ 044- 2372 6882.
படியேற்றம் என்றால் சிம்மாசனத்தில் ஏறி முடி சூட்டிக் கொள்ளுதல் என்று பொருள். இது ஒரு வரலாற்று நாவல். மூவேந்தர் காலத்து இசையும், ஆடலும் வளம் பெற்று கலையும் கலைஞர்களும் சிறப்புப் பெற்றனர் என்பதை இந்த நூல் அருமையாக எடுத்துரைக்கிறது.
காவிரிக் கரையிலிருந்து திருவிதாங்கூருக்கு பத்மனாபபுரம் வழியாகவே நாவல் பயணிக்கிறது. கதாநாயகி காவேரியின் இளமைக் கால வாழ்க்கை, சங்கீதத்தில் கற்று தேர்ச்சி பெற்று சிறப்பிடம் பெற்றது, அவர் திருவிதாங்கூர் அரண்மனைக்கு சென்று சங்கீதம் பயில்வது...என்று நூலாசிரியர் தனக்கே உரிய பாணியில் எடுத்துரைக்கிறார். நாவலின் தொடக்கத்தில் காவேரி ஆற்றின் சிறப்புகளை வர்ணித்திருப்பதில் புதிய தகவல்களை அறிய முடிகிறது.
கதாநாயகி காவேரி தனது வாழ்க்கையில் சோகங்களையும் துயரங்களையும் கடந்து, காதலையும், இன்பத்தையும் பெறுவதை நூலாசியர் தனக்கே உரிய பாணியில் விவரித்திருப்பது அருமை. ஆனால், ஆங்காங்கே உரையாடல்களில் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து, தமிழ்ப்படுத்தியே இருந்திருக்கலாம்.
தமிழர்களின் கலாசாரம், வீரம், கொடையை எடுத்துரைக்கும் எண்ணற்ற நூல்களில் இது சிறப்பிடம் பெற்று விளங்குகிறது எனலாம். கேரளத்து பாரம்பரியத்தையும் சில பக்கங்களில் உணர முடிகிறது.
தமிழ் இலக்கியம், வரலாறு, நாவல் ரசிகர்களுக்கு இந்த நூல் புதிய அனுபவம்தான்.