முத்துலட்சுமி ரெட்டி - வி.ஆர்.தேவிகா (தமிழாக்கம் பட்டு எம்.பூபதி- அக்களூர் இரவி); பக்.168; ரூ.200; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆ 044- 4200 9603.
புதுக்கோட்டையில் 1886-ஆம் ஆண்டு ஜூலை 30-இல் பிறந்தார் சி.என்.முத்துலட்சுமி. அவர் மறைவுற்ற 1968-ஆம் ஆண்டு ஜூலை 22 வரையிலான வாழ்க்கையை எடுத்துரைக்கிறது இந்த நூல். "சி' என்பது அவரது தாய் கோவிலூர் சந்திரம்மாள், 'என்' என்பது தந்தை நாராயணசாமி ஐயர்.
படிக்கும்போதே பலவித கேலிகளுக்கு ஆளாகியும் சாதனைகள் புரிந்திருக்கிறார். பத்து வயதில் நடக்கவிருந்த திருமணம் உறவினர் மறைவால் தள்ளிப் போயுள்ளது.
எம்.ஆர்.சி.எஸ். பட்டம் பெற்ற முதல் இந்திய மருத்துவரான சுந்தரம் ரெட்டி தேடி வந்து முத்துலட்சுமியின் பெற்றோரை சந்தித்து, ஒப்புதல் பெற்று மணம் புரிந்துள்ளார். முத்துலட்சுமியின் பிரசவத்தைக் கவனித்தவர் ஏ.எல்.முதலியார்.
புதுக்கோட்டை மகாராஜா ஆண்கள் பள்ளியின் முதல் மாணவி, சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்தியப் பெண் அறுவைச் சிகிச்சை நிபுணர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினர் போன்ற பல்வேறு பெருமைகள் உடையவர். சென்னை மாகாண மேலவை உறுப்பினராக தேவதாசி முறையை ஒழிக்க துணிச்சலோடு போராடினார்.
பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்ததில் இவரது பங்கு அளப்பரியது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவி, இன்றும் பல்லாயிரக்கணக்கானோரின் மறுவாழ்வுக்கு காரணமானவர். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்க தொடர்ந்து போராடியவர்களில் இவரும் ஒருவர். பெண்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.