அமரர் கல்கி - அனுஷா வெங்கடேஷ்; பக்.136; ரூ.160; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; ✆ 044- 4200 9603.
பொன்னியின் செல்வன்' திரைப்படம் வந்தவுடன் கல்கி குறித்த தேடுதல் அதிகமாகிவிட்டதால் வந்துள்ளது இந்த நூல். கல்கி சரித்திரக் கதை எழுத்தாளர் மட்டும் இல்லை; சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சிறுகதை, நகைச்சுவை, பயண இலக்கியம், சங்கீத விமர்சனம் எழுதிய எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர் (காற்றினிலே வரும் கீதம்), தமிழிசைக்காகப் பாடுபட்டவர்.. என்று பன்முகத்தன்மை கொண்டவரும் கூட.
காந்திஜி நாகபுரி காங்கிரஸ் மாநாட்டில், 'மாணவர்களே கல்லூரியை புறக்கணியுங்கள்' என்று விடுத்த அறைகூவலால் கல்கி கல்லூரிப் படிப்பை கைவிட்டார். திரு.வி.க.வால் நடத்தப்
பட்ட 'நவசக்தி' இதழில் சேர்ந்தார். அதன் தீவிர தனித்தமிழ் கல்கிக்கு உடன்பாடில்லை.
விகடனில் சேர்ந்தார். 'காங்கிரஸ் போராட்டமா? விகடன் அலுவலகமா? என்று யோசியுங்கள்' என்றார் விகடன் உரிமையாளர் எஸ்.எஸ். வாசன். போராட்டமே என்று முடிவெடுத்து
விகடனிலிருந்து வெளியேறினார். பின்னர், கல்கி இதழை தொடங்கினார். கல்கிக்கும், விகடனுக்கும் விமர்சனப் போர்.
உலகப் போர் நேரத்தில், சுதந்திரப் போராட்டத்தைத் தள்ளி வைக்கலாம் என்று காந்திஜி சொன்னதை கல்கி கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து, ராஜாஜியை ஆதரித்து, 'குட்டி கல்கி' என்ற பெயரில் இணைப்பிதழ் கொண்டு வந்தார்.
பாரதியார், காந்திஜிக்கு நினைவு மண்டபங்கள் அமைய கல்கியே காரணம். அதேபோல், வ.உ.சி., திரு.வி.க.வுக்கும் நினைவு மண்டபம் எழுப்பவும் அவர் பாடுபட்டார். கல்கி தனது அந்திம காலத்தில் தனது மகள் ஆனந்தியை அழைத்து பாரதியார் பாடலைப் பாடச் சொன்னார். தான் எழுதிய பாடலையும் பாடச் சொன்னார். 'அகக்கடல்தான் பொங்குவதேன்' என்ற பாடலைக் கேட்டபடியே அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க சொற்களே இல்லை என்றார் ராஜாஜி. அண்ணா வோ, 'அமரதாரா போயிற்று' என்றார். நூல் முழுவதும் சம்பவங்கள். இதுதான் அமரர் கல்கி.