இயங்கியல் பார்வையில் சங்க இலக்கியம் - முனைவர் சி.சுந்தரமூர்த்தி; பக்.292; ரூ.350; விளாவடியான் பதிப்பகம், தஞ்சாவூர்- 614 613; ✆ 99629 10391.
தமிழாய்வுகளில் தனித்தடம் பதித்துள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் எழுதியுள்ள நூல். தமிழ்ச் சமூக வரலாற்றை பின்புலமாகக் காட்சிப்படுத்தும் வகையில் உள்ள இந்த நூல் வழிபாடு, சமய வளர்ச்சி அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எடுத்தியம்புகிறது.
மார்க்சியத்தை எடுத்துரைக்கும் இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்று பொருள்முதல்வாதம், கொற்றவை வழிபாடு, முருக வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு, வைதீக சமயத்தினர்
நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும், சமணம், பௌத்தம், காவிரி நதியின் பங்களிப்பு, தமிழ்நாட்டின் வணிக வளர்ச்சி, தொல்காப்பியத்தில் அகத்திணை, புறத்திணையியல்களின் இயைபுத் தன்மைகள் ... என்று 20 தலைப்புகளில் தமிழ் இலக்கியத்தை நல்லதொரு முறையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
இந்த நூலில் தத்துவக் கூறுகள், தரவுக்களம், விவாதத்தை நல்லதொரு முறையில் விசாலமாகக் கொண்டு செல்கிறார். காதல், போர், மது, மாமிசம்.. என்று இருந்த மக்களை சமயங்களே நல்வழிகாட்டின என்ற கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.
நூலில் செய்யுள் வரிகளைக் குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் அதற்கான பொருளை தூய தமிழில் அளித்திருப்பது சிறப்பு. ஆராய்ச்சி படிக்க விரும்புவோருக்கும் நல்லதொரு வழிகாட்டி.