
வேதம் புதுமை செய் - கோதை ஜோதிலட்சுமி; பக்.208; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
கதை, கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதுவதோடு, தொலைக்காட்சி, வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து பன்முகப் பரிமாணம் கொண்டவர் நூலாசிரியர். கல்கி, பாரதி, ராஜாஜி எழுத்துகளில் ஆர்வமுள்ளவர். தினமணி நாளிதழில் இவர் எழுதிய 38 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
புராதன இந்தியா, வேதங்கள், சனாதன தர்மம், இதிகாசங்கள், மனுதர்மம், திராவிடம், பாரதியார் பெண்ணியம், சமூக நீதி, சன்மார்க்கம் உள்ளிட்ட பொருள்களில் தனது மனதுக்குப் பட்டதை மிகத் தெளிவாக, ஆழத்துடன் முன்வைக்கின்றன நூலாசிரியரின் கட்டுரைகள்.
குறிப்பாக, சனாதன தர்மம் எனும் ஒளி, ஜெகத்குருவின் ஷண்மதமும் தமிழரும், வேதங்களும் மேக்ஸ்முல்லரும், நாமும் சனாதனக் காவலர்களே!, பாரதியும் பெண்ணியமும், பாரதியும் ஆரியமும், ஆதிசங்கரரும் திராவிடமும், இதிகாசங்கள் தவறா?, மனுஸ்மிருதியில் பெண்கள், தமிழர் யார்?, வேதம் புதுமை செய், வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி, சாக்தம் பாரதப் பெண்ணியம் போன்ற கட்டுரைகளில் எடுத்துவைக்கும் வாதங்கள், எளிய தமிழில் ஒவ்வொரு வாசகருக்கும் புரியும்விதத்தில் உள்ளன.
தமிழகம் என்றும் பாரதத்தின் அங்கம்தான்; அது தேசியத்தின் பக்கம்தான் என்றும், சனாதன தர்மம் பாரத தேசத்தின் தனித்துவமான அடையாளம் என்றும் தனது வாதங்களில் முன்வைக்கிறார்.
"கோதை தன் நிலைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் செய்துகொண்டதில்லை. தனது பார்வையில், நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார். அவரிடம் குழப்பமற்ற, தெளிவான சிந்தனை இருக்கிறது. கோதையின் துணிச்சலுக்காக அவரை வாழ்த்துகிறேன்' என்று நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது அணிந்துரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
வேதம், மனுஸ்மிருதி, இதிகாசங்கள், ஆதிசங்கர ஷண்மதம், பாரதியின் ஆன்மா குறித்தெல்லாம் அறிய அந்தந்த நூல்களைத் தேடிப் போகவேண்டியதில்லை. அவற்றின் சாரமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.